வீர மரணம் அடைந்த ராணுவ வீரர் ஹேங்பன் தாதாவுக்கு அசோக் சக்ரா விருது.. பிரணாப் வழங்கினார்
தீவிரவாதிகளுடனான சண்டையில் வீர மரணமடைந்த ஹேங்பன் தாதாவிற்கு அசோக் சக்ரா விருது இன்று வழங்கப்பட்டது. குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜியிடம் இருந்து விருதினை அவரது மனைவி சாசென் லவாங் பெற்றுக் கொண்டார்.
டெல்லி: இந்தியாவின் 68வது குடியரசு தினம் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த விழாவில் தீவிரவாதிகளுடனான சண்டையில் வீர மரணமடைந்த ராணுவ வீரர் ஹேங்பன் தாதாவிற்கு அசோக் சக்ரா விருது வழங்கப்பட்டது. மறைந்த ராணுவ வீரரின் மனைவி குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியிடம் இருந்து விருதினைப் பெற்றுக் கொண்டார்.
டெல்லி ராஜ்பாத்தில் 68வது குடியரசு தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. ராஜபாதையில் நடைபெற்று வரும் விழாவில் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.
இந்த விழாவில் பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர்கள் உட்பட பல முக்கிய தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக அபுதாபி பட்டத்து இளவரசர் முகமத் பின் சையது பங்கேற்றுள்ளார். மேலும் பல்வேறு நாடுகளின் தூதர்கள் உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றுள்ளனர்.
இந்த நிகழ்ச்சியின் போது, வீர மரணம் அடைந்த ராணுவ வீரர் ஹேங்பன் தாதாவுக்கு அசோக் சக்ரா விருதை அவருடைய மனைவியிடம் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி வழங்கினார். பின்னர் நடைபெற்ற முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையை பிரணாப் ஏற்று கொண்டார்.