”ஹேப்பி டூ ப்ளீட்”- முன்னோர் வழக்கங்களை மூட நம்பிக்கைகள் ஆக்காதீங்க ப்ளீஸ்!
டெல்லி: சபரி மலை ஐயப்பன் கோவிலுக்குள் பெண்களை அனுமதிப்பது தொடர்பாக சர்ச்சைக்குரிய வகையில் பேசிய திருவாங்கூர் தேவஸ்தான தலைவரைக் கண்டித்து முகநூல் உள்ளிட்ட சமூகவலைதளங்களில் ஏராளமான பெண்கள் தங்களது எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர்.
இந்நிலையில் உண்மையிலேயே மாதவிடாய் என்றால் என்ன... அதை ஏன் தீண்டத் தகாத விஷயமாக இன்னும் பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள்.
பெண்களுக்கு மாதம் தோறும் நடக்கும் ஒரு சாதாரண உடல் சார்ந்த சுழற்சியால் ஏன் இவ்வளவு போராட்டம் என்பதைப் பற்றியெல்லாம் பெரிய கல்வி கற்ற நிலையில் இருப்பவர்களுக்கே சரியான அறிவில்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை.

புதுப்பிக்கும் சுழற்சி:
மாதாமாதம் கருவினைச் சுமக்க இருக்கின்ற பெண்ணின் கர்ப்பையானது தன்னையே புதுப்பித்துக் கொள்கின்ற ஒரு நிகழ்வுதான் மாதவிடாய். அதற்கு சரியான பெயர் "மாத ஓய்வு". விலக்கு என்பதே அந்த 3 நாட்களும் பெண்களின் உடலில் சோர்வு அதிகமாக இருக்கும் என்கின்ற காரணத்தினாலேயே அக்காலத்தில் வீட்டிலிருந்து ஓய்வு அளித்தார்கள்.

பாதுகாப்பு வேலைதான்:
மக்களின் மனதில் குடிகொண்டிருப்பது போல் அது தீண்டத்தகாத விஷயமல்ல. எளிய முறையில் விளக்குவதென்றால் பெண்ணின் கருப்பையில் குழந்தை உருவானால் அதனைப் பாதுக்காக்க இருக்கும் "எண்டோமெட்ரியம்" என்னும் பாதுகாப்பு கவசம் கருவின் நலனுக்காகவும், வளர்ச்சிக்காகவும் தன்னை உறுதிப்படுத்திக் கொள்ள ஒவ்வொரு மாதமும் 22 முதல் 30 நாட்களுக்கு ஒரு முறை பலப்பட்டுத்திக் கொள்ளும்.

கருப்பை உறுதிக்காக:
கரு உருவாகும் போது அதற்கான அனைத்து பாதுகாப்புகளையும் அளிக்க கருப்பை உறுதியாக இருக்க வேண்டும் என்பதற்கான நிகழ்வே இது. கிட்டதட்ட ஆண்கள் ஜிம் போன்ற இடங்களுக்கு சென்று தங்கள் உடல் வலிமையை அதிகரித்து கொள்வது போலதான் இதுவும்.. இதற்கு அறிவியல் சார்ந்த விளக்கங்கள் தேவை இல்லை இந்த நடைமுறை விளக்கமே போதும்.

கடினமான காட்டுப் பாதை:
அடுத்த விஷயம் அக்காலத்தில் சபரிமலை ஐய்யப்பன் கோவிலுக்குச் செல்வதற்கான பாதை மிகவும் கடினமான காட்டுப் பாதை. மிருகங்கள் நிறைந்த பாதை. அதனால் மாதவிடாய் காலங்களில் பெண்களால் பயணம் மேற்கொள்வது சிரமம் என்பதாலும், அக்காலங்களில் அவர்களுடைய உடலில் ஏற்படும் ஒரு வாசனையால் மிருகங்கள் அவர்களை எளிதாக இனம் கண்டுவிடும் என்பதாலேயே வயதுக்கு வந்த பெண்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதே தவிர தீட்டு என்ற மூடப் போர்வையால் அல்ல.
|
மாத ஓய்வு மட்டுமே:
முடி வளர்தலும், சிறுநீர் கழித்தலும், காலைக் கடன்களை செய்தலும் எப்படி ஒரு சாதாரண தினசரி நிகழ்வோ அப்படித்தான் இதுவும். அதையும் தாண்டி ஒரு குழந்தை பிறக்க வேண்டும் என்றால் மாத ஓய்வு ஏற்படும் உடல்நிலை கொண்டுள்ள பெண்ணால் மட்டுமே முடியும். அப்படிப்பட்ட உயிர்களை உருவாக்கும் செயலுக்கான அடிப்படையே இந்த சுழற்சிதான்.
|
இது வரம்தான்:
தாய்மை பெண்களுக்கு மட்டுமே இறைவன் அளித்த வரம். அதனை இறைவனே எந்தக் காலத்திலும் தீட்டு என்று கருதியதில்லை. ஹரியே பெண்ணாக மாறித்தான் ஐய்யப்பனை பெற்றெடுத்தார் இது அனைவருக்கும் தெரிந்ததே. இந்நிலையில் சில பாதுகாப்பு காரணங்களுக்காகவே இளம் பெண்கள் சாஸ்தாவை காணச் செல்லக் கூடாது என்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதே தவிர அவர்கள் ஐய்யப்பனை வழிபடத் தகுதி இல்லாதவர்கள் என்பதற்காக அல்ல. முன்னோர்களின் வழியைப் பின்பற்றுங்கள்... ஆனால், அவற்றை முட்டாள்தனமான கருத்துக்களாக வெளிப்படுத்தாதீர்கள்...ஹேப்பி டூ ப்ளீட்!












Click it and Unblock the Notifications