எதிர்ப்பாளர்கள் மீது முட்டை வீசுவது, இங்க் கொட்டுவது எல்லாமே ஜனநாயக உரிமை...சொல்வது ஹர்திக் படேல்
எதிர்ப்பாளர்கள் மீது முட்டை வீசுவது மற்றும் இங்க் அடிப்பது என்பது ஜனநாயக உரிமை என்கிறார் ஹர்திக் படேல்
அகமதாபாத்: எதிர்ப்பாளர்கள் மீது முட்டை வீசுவது, இங்க் கொட்டுவது என்பது ஜனநாயக உரிமை என படேல் போராட்டக் குழுத் தலைவர் ஹர்திக் படேல் கூறியுள்ளார்.
படேல் சமூகத்துக்கும் இடஒதுக்கீடு கொடு; இல்லையேல் இடஒதுக்கீட்டு முறையை ஒழி என்ற முழக்கத்துடன் குஜராத்தை கதிகலங்க வைத்தவர் ஹர்திக் படேல். இதனால் அவர் மீது தேசதுரோக வழக்கு போடப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
பின்னர் அவர் 6 மாதம் குஜராத்துக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டு ஜாமீன் தரப்பட்டது. இந்த நிலையில் 6 மாத கால நிபந்தனை முடிவடைந்த நிலையில் குஜராத் மாநிலத்துக்குள் மீண்டும் கால் வைத்துள்ளார் ஹர்திக்படேல்.
இதனிடையே போட்டி படேல் சமூக இயக்கத்தின் தலைவர் ருத்விஜ் படேல் நடத்திய பேரணியின் போது ஹர்திக் படேலின் ஆதரவாளர் மங்குகியா என்பவர் முட்டை மற்றும் இங்க் வீசி தாக்கியுள்ளார். இதில் ஆத்திரமடைந்தவர்கள் மங்குகியாவை வெளுத்து வாங்கியுள்ளனர்.
தற்போது மருத்துவமனையில் மங்குகியா அனுமதிக்கப்பட்டார். அவரை சந்தித்த போது செய்தியாளர்களிடம் பேசிய ஹர்திக் படேல், முட்டை வீசுவது, இங்க் அடிப்பது எல்லாமே ஜனநாயக உரிமை; அதற்காக தாக்குதல் நடத்துவது எந்தவகையிலும் முறையானது அல்ல என கூறியுள்ளார்.
இதனால் ஹர்திக் படேல் ஆதரவாளர்கள் மீண்டும் வன்முறையில் இறங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.