எங்களுக்கு கடன் கிடைக்கலையே அம்மா... ஏக்கத்துடன் காத்திருக்கும் தெருவோர வியாபாரிகள்!
அகமதாபாத்: படேல்களுக்கு இடஒதுக்கீடு கோரும் விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் மீண்டும் போராட்டத்தை தொடங்கப் போவதாக குஜராத் முதல்வர் ஆனந்திபென் படேலுக்கு சிறையில் இருந்து கடிதம் மூலம் ஹர்திக் படேல் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
குஜராத்தில் முற்பட்ட சமூகத்தினராக உள்ள படேல்களை இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்து இடஒதுக்கீடு வழங்க வேண்டும்; இல்லையெனில் இடஒதுக்கீட்டு முறையையே ஒழிக்க வேண்டும் என்பது ஹர்திக் படேலின் கோரிக்கை. 22 வயதாகும் இளைஞரான ஹர்திக் படேல் தலைமையில் இடஒதுக்கீடு கோரிக்கையை வலியுறுத்தி லட்சக்கணக்கான படேல்கள் போராட்டத்தில் குதித்தனர்.

இதனால் குஜராத்தில் ஆளும் பாஜக அரசுக்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டது. அத்துடன் ஹர்திக் படேல் உள்ளிட்ட படேல் சமூகத்தினர் பலர் மீதும் தேச துரோக வழக்கு பாய்ந்தது. ஹர்திக் படேல் கைது செய்யப்பட்டு சூரத் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
அண்மையில் குஜராத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் படேல்கள், காங்கிரஸ் கட்சி ஆதரவு தெரிவித்தனர். இதனால் பாரதிய ஜனதா பெரும் பின்னடைவை சந்தித்தது.
இதன் எதிரொலியாக படேல்களுக்கு எதிரான வழக்குகளைத் திரும்பப் பெற்று சமர பேச்சுவார்த்தைக்கு இறங்கி வந்தது குஜராத் ஆளும் பாஜக அரசு. இந்நிலையில் சூரத் சிறையில் இருந்து முதல்வர் ஆனந்திபென் படேலுக்கு ஹர்திக் படேல் ஒரு கடிதம் அனுப்பியுள்ளார். அதில், படேல் இளைஞர்கள் மீதான வழக்குகளைத் திரும்பப் பெறும் முடிவை வரவேற்கிறேன்.
ஆனால் இந்த போராட்டத்துக்கு காரணமான படேல்களுக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை குறித்து பாஜக அரசு இதுவரை எதுவுமே கூறவில்லை. கைது செய்யப்பட்ட அனைத்து படேல் சமூக தலைவர்களையும் உடனே விடுதலை செய்ய வேண்டும்.
படேல் சமூக இளைஞர்கள் பெரும் கொந்தளிப்புடன் இருக்கின்றனர். அவர்கள் அடுத்த கட்ட போராட்டத்துக்கும் தயாராகிவிட்டனர். அப்படி படேல் சமூகத்தினர் மீண்டும் போராட்டத்தில் குதித்தால் 2017ஆம் ஆண்டு குஜராத் சட்டசபை தேர்தலில் பாஜக, ஆட்சி அதிகாரத்தில் இருந்து தூக்கி எறியப்படும் நிலைமைதான் உருவாகும்.
நாங்கள் பாஜகவுக்கு எதிரானவர்கள் அல்ல. எங்கள் சமூகத்தின் கோரிக்கையை நீங்கள் நிறைவேற்ற வேண்டும். சிறையில் உள்ள அனைத்து படேல் தலைவர்களையும் விடுதலை செய்து ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும் என ஹர்திக் படேல் எச்சரித்துள்ளார்.












Click it and Unblock the Notifications