ஹரியானா தேர்தல்.. நாட்டின் கோடீஸ்வர பெண்ணுக்கு 'கல்தா' கொடுத்த பாஜக! சாவித்ரி ஜிண்டால் அதிரடி முடிவு
ஹரியானா சட்டமன்ற தேர்தலில் ஹிசார் தொகுதியில் போட்டியிட பாஜக வாய்ப்பு வழங்காததால், சாவித்ரி ஜிண்டால் சுயேட்சையாக போட்டியிட திட்டமிட்டுள்ளார். நாட்டின் கோடீஸ்வர பெண்கள் பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் சாவித்ரி ஜிண்டாலின் சொத்து மதிப்பு ரூ.3.3 லட்சம் கோடியாகும்.
ஹரியானா மாநில சட்டசபை தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அண்மையில் அறிவித்தது.
அக்டோபர் மாதம் 5ஆம் தேதி அங்கு ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. எட்டாம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. இந்த நிலையில் ஹரியானா மாநிலத்தில் பாஜக தனித்துப் போட்டியிடுகிறது.

காங்கிரஸ் ஆம் ஆத்மி இடையே கூட்டணி பேச்சு வார்த்தை நடைபெற்றது. ஆனால் உடன்பாடு எட்டப்படாததால் காங்கிரஸ் கட்சியும் ஆம் ஆத்மி கட்சியும் இந்த தேர்தலில் தனித்தனியே களம் காண்கின்றன. இதேபோல ஜனநாயக ஜனதா கட்சி, ஆசாத் சாமாஜ் கட்சி கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. தற்போதைய சூழலில் ஹரியானா மாநில சட்டசபை தேர்தலில் நான்கு முனை போட்டி நிலவுகிறது.
தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை அரசியல் கட்சிகள் அறிவித்து வருகின்றன. அந்த வகையில் பாஜக கடந்த புதன்கிழமை 67 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது. இதில் ஹிசார் தொகுதியில் தனக்கு போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் என கோடீஸ்வர பெண்ணான சாவித்ரி ஜிண்டால் எதிர்பார்த்தார். நாட்டின் கோடீஸ்வர பெண்கள் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறார் சாவித்ரி ஜிண்டால்.
இவருடைய சொத்து மதிப்பு 3.31 லட்சம் கோடி. ஒபி ஜிண்டால் குழும தலைவரான இவரது மகன் நவீன் ஜிண்டால் சமீபத்தில் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் சேர்ந்தார். லோக்சபா தேர்தலில் குருஷேத்ரா தொகுதியில் போட்டியிட்டு இவர் வெற்றியும் பெற்றார். தேர்தலின்போது மகனுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்து வந்த சாவித்ரி ஜிண்டால், தனக்கு சட்டமன்ற தேர்தலில் போட்டியிட பாஜக வாய்ப்பளிக்கும் என எதிர்பார்த்து இருந்தார்.
ஹிசார் தொகுதியில் தனக்கு சீட் கிடைக்கும் என சாவித்ரி ஜிண்டால் எதிர்பார்த்து இருந்த நிலையில், அவருக்கு பதிலாக மாநில சுகாதார அமைச்சர் கமல் குப்தாவிற்கு பாஜக சீட் கொடுத்தது. இதனால், சாவித்ரி ஜீண்டால் மற்றும் அவரது ஆதரவாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து, சாவித்ரி ஜிண்டாலின் ஆதரவாளர்கள் அவரது வீட்டு முன்பாக கூடினர். வரும் தேர்தலில் போட்டியிட வேண்டும் என சாவித்ரி ஜிண்டாலை வலியுறுத்தினர்.
இதையடுத்து, தேர்தலில் போட்டியிடுகிறேன் என்று ஆதரவாளர்களிடம் சாவித்ரி ஜிண்டால் கூறினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சாவித்ரி, இந்த தொகுதி மக்கள் எனது குடும்பத்தை போன்றவர்கள். அவர்கள் நான் போட்டியிட வேண்டும் என்று விரும்புகிறார்கள். அவர்கள் விருப்பத்தை நிறைவேற்றுவேன்.
காங்கிரஸ் சார்பில் போட்டியிடுவேனா என்பது குறித்து ஆதரவாளர்கள் முடிவு செய்வார்கள். பாஜகவில் எனது மகன் போட்டியிட்டதால் பிரசாரம் செய்தேன். நான் பாஜக உறுப்பினராக இல்லை. அந்த கட்சி மீதும் எனக்கு கோபம் இல்லை" என்றார். ஹிசார் தொகுதியில் சுயேட்சையாக சாவித்ரி ஜிண்டால் போட்டியிட முடிவு செய்து இருப்பதாக சொல்லப்படுகிறது.












Click it and Unblock the Notifications