பாஜகவுக்கு விழுந்த மரண அடி! ஹரியானாவில் எதிர்பார்க்காத ட்விஸ்ட்! காங்கிரஸுக்கும் பெரிய சவால் இருக்கு
சண்டிகர்: ஹரியானாவில் வரும் அக். 5ம் தேதி சட்டசபைத் தேர்தல் நடைபெறும் நிலையில், அங்குப் பிரச்சாரம் தீவிரமாக நடந்து வருகிறது. கடந்த காலங்களில் ஹரியானாவில் பாஜக ஆதிக்கம் செலுத்தி வந்துள்ள நிலையில், நம்பிக்கையுடன் தேர்தலை எதிர்கொள்கிறது. ஆனால், தற்போது இருக்கும் அரசியல் சூழலை வைத்துப் பார்க்கும் போது எதிர்க்கட்சிகளின் கைகளே ஓங்கி இருக்கிறது.
ஹரியானாவில் கடந்த 10 ஆண்டுகளாக பாஜக ஆட்சியே நடந்து வருகிறது. அங்கு அடுத்த மாதம் சட்டசபைத் தேர்தல் நடக்கும் நிலையில், இங்கு பாஜக- காங்கிரஸ் இடையே நேரடி போட்டி நிலவுகிறது.

இந்த ஹரியானா தேர்தலில் குர்கான் பகுதி ரொம்பவே முக்கியமானதாக இருக்கிறது. இந்தத் தொகுதிகளில் வெல்லும் கட்சியே அங்கு ஆட்சியை அமைக்க வாய்ப்புகள் அதிகம் என்பதால் பாஜக- காங்கிரஸ் என இரு தரப்பும் அங்குத் தீவிர பிரச்சாரத்தில் இறங்கியுள்ளது.
பாஜக ஆதிக்கம்: குர்கான் தொகுதியைப் பொறுத்தவரை அங்குக் கடந்த காலங்களில் பாஜகவே ஆதிக்கம் செலுத்தி வந்துள்ளது. அங்குள்ள குர்கான் லோக்சபா தொகுதியில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக பாஜக ஆதிக்கம் செலுத்தி வருகிறது. கடந்த 2014 முதல் தொடர்ந்து மூன்று முறை குர்கான் மக்களவை தொகுதியில் பாஜகவே வென்றுள்ளது. குர்கான் லோக்சபா தொகுதி என்பது மொத்தம் 9 சட்டசபை தொகுதிகளை உள்ளடக்கியதாகும்.
கடந்த காலங்களில் சட்டசபைத் தேர்தல்களிலும் காங்கிரஸ் கட்சியால் இந்த பகுதியில் பெரிய வெற்றியைப் பெற முடியவில்லை. ஹரியானாவில் உள்ள 90 சட்டசபை தொகுதிகளில் கிட்டதட்ட 10% தொகுதிகள் இந்த பிராந்தியத்தைச் சேர்ந்தவை. இங்கு பாஜக செல்வாக்கு அதிகமாக உள்ளதாலேயே ஆட்சியைத் தொடர்ந்து தக்கவைத்து வருகிறது. ஆனால், இவை எல்லாமே கடந்த காலம். இப்போது அங்கு அரசியல் சூழல் மாறி வருகிறது.
காங்கிரஸ் வளர்ச்சி: பாரம்பரியமாக பாஜகவின் கோட்டையாக இருந்து வரும் இந்த குர்கான் பகுதியில் காங்கிரஸ் திடீரென வளர்ந்து வருகிறது. இதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. அதில் முக்கியமானது உட்கட்சி மோதல். குர்கான் பிராந்தியத்தில் சில தொகுதிகளுக்கான பாஜக வேட்பாளர்கள் அறவிக்கப்பட்டுள்ள நிலையில், இது அங்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாம்.
குர்கான் லோக்சபா தொகுதி என்பது 3 மாவட்டங்களில் 9 தொகுதிகளை உள்ளடக்கியதாகும். குர்கானில் நான்கு தொகுதிகள், மேவாட்டில் மூன்று மற்றும் ரேவாரியில் இரண்டு தொகுதிகள் உள்ளன.
உட்கட்சி மோதல்: இங்குக் கட்சிக்காகப் பல ஆண்டுகள் உழைத்து அனுபவம் வாய்ந்த தலைவர்கள் ஓரங்கட்டப்பட்டு, சம்பந்தமே இல்லாத பலருக்கு வாய்ப்பு தரப்பட்டுள்ளதாகக் கொந்தளிக்கிறார்கள் பாஜக நிர்வாகிகள். இதனால் அங்கு அதிருப்தியான சூழலே நிலவி வருகிறது. இதனால் இந்த பிராந்தியத்தில் பிரச்சாரமும் கூட எதிர்பார்த்த அளவுக்குச் சுறுசுறுப்பாக இல்லை. அதிருப்தியில் உள்ள மூத்த தலைவர்களைச் சமாதானம் செய்யவில்லை என்றால் அவர்கள் எதிர்க்கட்சி வேட்பாளர்களைக் கூட மறைமுகமாக ஆதரிக்கலாம். அது பாஜகவுக்கு மிகப் பெரிய பின்னடைவாகப் போகும்.
என்ன பிரச்சினை: மேலும், குர்கானில் இப்போது பல்வேறு சிவிக் பிரச்சினைகள் இருக்கிறது. உள்கட்டமைப்பு குளறுபடிகள், சிறிது நேரம் மழை பெய்தாலே சாலையில் நீர் தேங்குவது, மோசமான சாலை, காற்று மற்றும் நீர் மாசு, தண்ணீர் பற்றாக்குறை, சீரற்ற மின்சாரம் மற்றும் சட்டம் ஒழுங்கு பிரச்சினை என மிகப் பெரிய லிஸ்ட்டே இருக்கிறது. இவை எல்லாம் ஆட்சியில் உள்ள பாஜகவுக்கு எதிராகத் திரும்புகிறது.
இப்படி ஆளும் பாஜகவுக்கு ஏகப்பட்ட பிரச்சினைகள் உள்ளன. இவை எல்லாம் காங்கிரஸ் கட்சிக்கு நல்ல ஒரு பூஸ்ட்டை கொடுத்துள்ளது. ஆனால், இதைப் பிரச்சார களத்தில் காங்கிரஸ் எப்படிப் பயன்படுத்திக் கொள்ளப் போகிறது என்பது ரொம்பவே முக்கியம். அதைப் பொறுத்தே காங்கிரஸின் வெற்றி இருக்கும்.












Click it and Unblock the Notifications