சர்ச்சை பேச்சு: சல்மான்கானிடம் ரூ.10 கோடி நஷ்ட ஈடுகேட்டு பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட பெண் நோட்டீஸ்
சண்டீகர்: ஹிந்தி நடிகர் சல்மான்கானிடம் பத்து கோடி ரூபாய் நஷ்ட ஈடுகேட்டு பலாத்காரத்தால் பாதிக்கப்ட்ட பெண் ஒருவர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
சமீபத்தில் தான் நடித்திருக்கும் சுல்தான் படம் குறித்து சல்மான் பேட்டியளித்தார். அந்தப் பேட்டியில் ''மல்யுத்த வீரராக நடிக்க மிகவும் கஷ்டப்பட்டேன். தினமும் மல்யுத்தக் காட்சிகளில் நடித்து வீடு திரும்பும்போது நேராக நடக்க முடியாமல் அவதிப்படுகிறேன்.
இதனால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பெண்ணைப்போல உணர்கிறேன்'' என்று கூறியிருந்தார். இவரது பேச்சுக்கு சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பு எழுந்தது. சல்மான் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று பெண்கள் அமைப்பினர் போர்க்கொடி உயர்த்தினர்.
இந்த நிலையில் ஹிரியாணா மாநிலம் மாநிலத்தைச் சேர்ந்த ரேஷ்மா என்பவர் தனது வழக்கறிஞர் மூலம் சல்மான்கானுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதில், பலாத்காரத்துக்கு உள்ளான தனக்கு சல்மான்கானின் கருத்து மேலும் பாதிப்பை உருவாக்கியுள்ளதாகவும், இதனால் பத்து கோடி ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
ரேஷ்மா கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு 10 பேர் கொண்ட கும்பலால் பலாத்காரம் செய்யப்பட்டார். இதையடுத்து ரேஷ்மாவின் தந்தை தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்கக் கோரி அவர் பஞ்சாப் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்த நிலையில் சுல்தான் படத்தின் படப்பிடிப்பின்போது பலாத்காரம் செய்யப்பட்ட பெண்ணாக தான் உணர்ந்ததாக சல்மான்கான் கூறியிருந்தார். இதற்காக அந்தப் பெண் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். ஏற்கனவே, மகாராஷ்டிர மகளிர் ஆணையம் நேரில் ஆஜராகுமாறு சல்மான்கானுக்கு சம்மன் அனுப்பியிருக்கிறது குறிப்பிடத்தக்கது.