ஆப்கானிஸ்தான் "கிளை"க்கு இந்தியாவில் ஆளெடுக்கிறதா ஐஎஸ்ஐஎஸ்?
டெல்லி: ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பு, ஆப்கானிஸ்தானில் தனது செயல்பாடுகளுக்காக இந்தியாவிலிருந்து ஆட்களை எடுப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மூளைச் சலவைக்குள்ளாகி இந்தியாவிலிருந்து ஐஎஸ் அமைப்பில் சேரக் கிளம்புவோர் ஈராக் அல்லது சிரியாவுக்குப் போவதாகவே இதுவரை கருதப்பட்டு வந்தது. ஆனால் தற்போது இதில் ஒரு திருப்பமாக ஆப்கானிஸ்தானுக்கு பலர் போவதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது.
சமீபத்தில் மகாராஷ்டிராவிலிருந்து மோசின் ஷேக், நூர் முகம்மது, வாஜித் ஆகிய 3 பேர் காணாமல் போனார்கள். அவர்கள் ஐஎஸ் அமைப்பில் சேரப் போயுள்ளதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. போலீஸாரின் தீவிர வேட்டையில் வாஜித் மட்டும் சிக்கினார். மற்ற இருவரும் என்ன ஆனார்கள் என்பது தெரியவில்லை.

வாஜித்திடம் நடத்திய விசாரணையின்போது போலீஸாருக்கு புதிய தகவல் கிடைத்தது. அதாவது அவர் உள்ளிட்ட 3 பேரும் ஆப்கானிஸ்தான் சென்று ஐஎஸ்ஸில் சேர முயன்றதாக தெரிவித்தார் வாஜித்.
அயஸ் சுல்தான் என்பவர் மூலமாக தாங்கள் ஆப்கானிஸ்தான் செல்ல முயன்றதாகவும் தெரிவித்தார் வாஜித். இவர் தனது நகைகளை விற்று சென்னைக்குப் போயுள்ளார். அங்கு டிராவல் ஏஜென்ட் ஒருவரைப் பார்த்து அவரிடம் பணத்தைக் கொடுத்து ஆப்கானிஸ்தான் செல்ல நடவடிக்கைகளை எடுத்துள்ளார்.
ஆப்கானிஸ்தானில் உள்ள ஐஎஸ் அமைப்பினருக்கு ஆளெடுத்துத் தரும் வேலையை இந்த சுல்தான் செய்து வருகிறாராம். ஆப்கானிஸ்தானுக்கு இந்திய இளைஞர்கள் தீவிரவாத செயல்களில் ஈடுபடச் செல்வதாக வந்துள்ள தகவல் உளவத்துறையினரை அதிர வைத்துள்ளது.












Click it and Unblock the Notifications