வெறுப்பரசியலின் கோரப்பிடியில் சிக்கிக் கொண்ட 'காதல் சின்னம்' தாஜ்மஹால்
உலகமே வியந்து போற்றும் காதல் சின்னமான தாஜ்மஹால் இப்போது வெறுப்பரசியலின் கோரப்பிடியில் சிக்கி தவிக்கிறது.
Recommended Video
டெல்லி: இந்தியாவில் விதைக்கப்பட்டுவிட்ட வெறுப்பரசியலின் உச்சகட்ட கோரப்பிடியில் சிக்கிக் கொண்டிருக்கிறது அழியாத காதல் சின்னம் தாஜ்மஹால்.
தாஜ்மஹால்... இந்தியாவின் அடையாளங்களில் ஒன்று.. இது கட்டிடக் கலைக்காக மட்டும் கொண்டாடப்படவில்லை. அழியா காதலின் அற்புத நினைவுச் சின்னம்.
இதை கட்டிய ஷாஜஹான் ஒரு உன்னத காதலனாகத்தான் அறியப்பட்டிருக்கிறான்... அவன் ஒரு மொகலாய மன்னன் என்பதற்காக உலகம் கொண்டாடவில்லை..
தாஜ்மஹாலை ஏற்க மறுப்பு
ஆனால் வெறுப்பரசியலில் வேர்பிடித்து வளர்ந்த கும்பல் இப்போது தாஜ்மஹாலுக்கு வேட்டு வைத்திருக்கிறது. தாஜ்மஹாலையும் குதுப்மினாரையும் இந்திய கலாசாரத்தின் அடையாளமாக பார்க்க முடியாது என சொன்னவர் யோகி ஆதித்யநாத்.
புதிய விளக்கம் தரும் உபி அரசு
தற்போது உத்தரப்பிரதேச முதல்வர் பதவியில் அமர்ந்து கொண்டு தாஜ்மஹாலை உத்தரப்பிரதேச சுற்றுலா தலப் பட்டியலில் இருந்து நீக்கி அறிவித்திருக்கிறார். இந்த விவகாரம் சர்ச்சையானவுடன் புதிய சுற்றுலா தல மேம்பாட்டு திட்டத்துக்கான இடங்கள்தான் பட்டியலிடப்பட்டுள்ள என்கிறது பாஜக வட்டாரங்கள்.
மொகலாய கட்டிடக் கலை
அத்துடன் மொகலாய கட்டிடக் கலை எப்படி இந்தியாவின் அடையாளமாக இருக்க முடியும் என்கிறது பாஜக வட்டாரம். 70 ஆண்டுகளுக்கு முன்புதான் இந்தியா என்கிற ஒரு நாடே உருவானது என்பதை இவர்கள் வசதியாக மறந்துவிடுகிறார்கள்.
திராவிடர் கட்டிட கலை
அதற்கு முன்னர் இந்தியா என்கிற பெருநிலப்பரப்பில் வெவ்வேறு இன மக்கள் தங்களது பண்பாடு கலாசார செழுமைகளுடன் வாழ்ந்து வந்தனர். தஞ்சை பெரிய கோவில் திராவிட கட்டிடக் கலையின் உச்சமாக கொண்டாடப்படுகிறது.
இடிக்கப்படுமா ஆங்கிலேயர் கட்டுமானங்கள்
இன்றளவும் இந்தியாவின் அனைத்து மாநில ஆட்சியர் அலுவலகங்கள், நீதிமன்றங்கள், பிரதான கட்டிடங்கள் அனைத்தும் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்டவை. இவை அனைத்துமே இந்திய கலாசாரத்தின் அடையாளம் அல்ல. அதற்காக இடிக்கப்பட்டுவிடுமா?
பூர்வகுடிகள் போர்க்கொடி தூக்கினால்?
இன்னமும் சொல்லப்போனால் இந்த மண்ணின் பூர்வகுடிகள் திராவிடர்கள்தான். இன்று மொகலாய கட்டிடக் கலை, அன்னியர் கலாசாரம் என பேசுகிறவர்கள் இந்தியாவுக்குள் கணவாய்கள் வழியாக படையெடுத்து வந்தவர்கள்தான் என பூர்வகுடிகள் போர்க்கொடி தூக்கினால் நிலைமை என்னவாகும்? தாஜ்மஹால் எனும் காவியத்தை காதலின் அதிஅற்புத படைப்பாக மட்டுமே பாருங்கள்... கலவரத்தைத் தூண்டுகிற கன்றாவி கண்களோடு அலைபாயாதீர்கள்!