ஆன்மிகமும் ஆரோக்கியமும் ஒன்றோடு ஒன்று இணைக்கப்பட்டுள்ளன..சமஸ்கிருத பழமொழியை குறிப்பிட்ட பிரதமர் மோடி
ஃபரிதாபாத்: ஆன்மிகமும் மருத்துவமும் ஒன்றோடு ஒன்று இணைந்த நாடாக இந்தியா திகழ்வதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
ஹரியானா மாநிலம் ஃபரிதாபாத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள அம்ரிதா மருத்துவமனையை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். அம்ரிதா மருத்துவமனை 2,500 படுக்கை வசதிகள் உள்ள சுமார் ரூ.6000 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் ஹரியானா மாநில முதல்வர் மனோகர் லால் கட்டார், துணை முதல்வர் துஷ்யந்த் சவுதாலா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இதனைத்தொடர்ந்து நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பேசுகையில், அன்னை அமிர்தானந்தமா, அவரது மடத்துடன் தொடர்புடைய அனைத்து துறவிகள் மற்றும் அறக்கட்டளை உறுப்பினர்கள், மருத்துவர்கள், புதிய மருத்துவமனையின் பணியாளர்கள் அனைவரையும் வாழ்த்தினார்.

சமஸ்கிருத பழமொழி
தொடர்ந்து சமஸ்கிருத பழமொழியை குறிப்பிட்ட பிரதமர் நரேந்திர மோடி, நாங்கள் ராஜ்யத்தையோ, சொர்க்கத்தின் சுகங்களையோ விரும்புவதில்லை. துன்பம் என்று வரும் நோயாளிகளின் வலியைப் போக்கும் பாக்கியம் எங்களுக்கு கிடைக்க வேண்டும் என்றே விரும்புகிறோம் என்று கூறினார்.

ஆன்மிகம், ஆரோக்கியம்
தொடர்ந்து, இந்தியாவில் மருத்துவம் சேவையாகவும், ஆரோக்கியம் ஒரு தொண்டாகவும் பார்க்கப்படுகிறது. ஆன்மிகமும், ஆரோக்கியமும் ஒன்றோடு ஒன்று இணைந்த நாடாக இந்தியா திகழ்கிறது. நவீனம் மற்றும் தொழில்நுட்பத்தின் கலவை மூலம் சுகாதாரத்துறை நாட்டை வளர்ச்சிக்கு இட்டுச்செல்லும். இந்தியாவில் மதம் மற்றும் சமூக நலன் சார்ந்த நிறுவனங்களால் கல்வி மற்றும் மருத்துவம் தொடர்பான பொறுப்புகள் நிறைவேற்றப்பட்டு வருகிறது.

அரசு - தனியார் முயற்சி
இது அரசு மற்றும் தனியார் சார்பாக மேற்கொள்ளப்படும் கூட்டு முயற்சி என்று முன் காலத்தில் சொல்வார்கள். ஆனால், நான் இதனை பரஸ்பர முயற்சியாகவே பார்க்கிறேன். சுகாதாரம் மற்றும் கல்வி துறைகளில் அரசு அர்ப்பணிப்புடனும் நேர்மையுடனும் பணிபுரிய வேண்டும் என்று நாடு விரும்புகிறது. இதற்காக சமூக நிறுவனங்களும் ஊக்குவிக்கப்படுகின்றன.

கொரோனா தடுப்பூசி
கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசியை இந்தியா தயாரித்த போது, அதுகுறித்து பல்வேறு வதந்திகள் பரவின. ஆனால் சமூகத்தின் மதத் தலைவர்களும் ஆன்மீகத் தலைவர்களும் ஒன்றிணைந்து, வதந்திகளுக்கு நம்ப வேண்டாம் என்று மக்களைக் கேட்டுக் கொண்டனர். அதற்கு உடனடி பலன் கிடைத்தது. மற்ற நாடுகளைப் போல், தடுப்பூசி செலுத்திக்கொள்ள மக்கள் யாரும் தயக்கத்தை வெளிப்படுத்தவில்லை என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications