2ஜி ஊழல் தெரியும்.. 'ஜிஜாஜி' ஊழல் தெரியுமா?: மோடி கடும் தாக்கு
ராய்ப்பூர்: 2ஜி ஊழலை பற்றி கேள்விப்பட்ட நாம், இப்போது ஜிஜாஜி (அக்கா வீட்டுக்காரர்) ஊழலைப் பற்றி கேள்விப்படுகிறோம் என்று பாஜகவின் பிரமதர் பதவிக்கான வேட்பாளர் நரேந்திரமோடி தெரிவித்தார்.
சட்டீஸ்கர் மாநிலம் சர்குஜா பகுதியில் இன்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட நரேந்திரமோடி, சோனியாகாந்தி குடும்பத்தை கடுமையாக தாக்கி பேசினார். அவர் கூறியதாவது:
மூன்றே ஆண்டில் 300 கோடி
அமெரிக்க பத்திரிகையொன்றில் ராகுல் காந்தியின் ஜிஜாஜியான ராபர்ட் வத்ரா பற்றி குறிப்பிட்டுள்ளார்கள். ரூ.1 லட்சத்தை பாக்கெட்டில் வைத்துக்கொண்டு வந்த ஒருவர் மூன்றே ஆண்டுகளில் ரூ.300 கோடிக்கு சொந்தக்காரர் ஆகியுள்ளதாக அதில் கூறியுள்ளனர். இதுதான் தாய்-மகன் மாடல் நிர்வாகம். நீங்கள் 2ஜி ஊழலை பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். இப்போது ஜிஜாஜி (மருமகன்) ஊழல் குறித்து கேள்விப்படுகிறோம். இத்தகைய நபர்கள் கைகளிலா நமது நாட்டை அளிக்க வேண்டும்.
லாஜிக் இல்லா பேச்சு
அமேதி தொகுதியில் ராகுல்காந்தியை வெற்றிபெறச் செய்ய வேண்டும் என்று சோனியாகாந்தி பிரச்சாரம் செய்தார். ராகுல்காந்தியை பத்திரமாக பார்த்துக்கொள்ளும் பொறுப்பை அமேதி மக்களிடம் வழங்கியுள்ளதாக சோனியாகாந்தி கூறினார். ஆனால் ராகுல்காந்திதான் நாட்டை பார்த்துக்கொள்ளப்போவதாக நமக்கு கூறிவருகிறார்கள். இதில் ஏதாவது லாஜிக் உள்ளதா? அமேதியையே நிர்வகிக்க தெரியாதவர் எப்படி நாட்டை நிர்வகிப்பார்?
அனைத்து வார்த்தைகளும் பொய்
பெண்கள் பாதுகாப்பு பற்றி ராகுல்காந்தி மக்களை திசைதிருப்பி வருகிறார். பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நடப்பதில் டாப் 10 இடத்திலுள்ள மாநிலங்களில் 7 மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சிதான் நடக்கிறது. இனிமேல் காங்கிரஸ் தனது தேர்தல் கோஷத்தை 'ஒவ்வொரு கையிலும் ஊழல், அனைத்து வார்த்தைகளும் பொய்' என்று மாற்றிக்கொள்ளலாம்.
பேசியதே சாதனை
பிரதமர் மன்மோகன்சிங் கடந்த 10ஆண்டுகளில் 1100 முறை பேசியுள்ளதாக, பிரதமரின் செய்தி தொடர்பு ஆலோசகர் பங்கஜ் பச்சவுரி தெரிவித்துள்ளார். இதைக்கூற முதன்முறையாக பிரதமர் அலுவலக அதிகாரி பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். கடந்த 10 ஆண்டுகளில் பிரதமர் செய்த சாதனை 1100 முறை பேசியதுதான் என்பதை அவர்களே ஒப்புக்கொண்டுள்ளனர்.
அம்மா-மகன் ஆட்சி
உண்மையிலேயே மன்மோகன்சிங் அரசு நடைபெறவில்லை, மாறாக மா-பேட்டா (தாய்-மகன்) அரசுதான் நடைபெற்றது என்று பிரதமரின் முன்னாள் ஊடக ஆலோசகர் சஞ்சய்பாரு தனது புத்தகத்தில் தெரிவித்துள்ளார். அரசின் தவறுகளுக்கு நாம் இத்தனை காலம் மன்மோகன்சிங்கை விமர்சனம் செய்து வந்தோம். ஆனால் பிரதமர் அலுவலக முன்னாள் அதிகாரி கூறியதை வைத்து பார்க்கும்போது சோனியா மற்றும் ராகுல்காந்தியிடம்தான் அதிகாரம் இருந்தது தெரியவருகிறது. இவ்வாறு மோடி பேசினார்.