தக்காளி விலையை கேட்டு விவசாயி நடுரோட்டில் கண்ணீர்.. சாலையில் கொட்டிவிட்டு வீடு திரும்பிய சோகம்
திருப்பதி: ஆந்திர மாநிலம் கர்னூலில் தக்காளி விலை கிலோ 4 ரூபாய்க்கு சரிந்து போனதால், ஆத்திரம் அடைந்த விவசாயி ஒருவர், தக்காளியை சாலையில் கொட்டி அழித்தார். பின்னர் கண்ணீரோடு விவசாயி வீடு திரும்பினார்.
ஆந்திரா மாநிலம் கர்னூல் அருகே பாடிகொண்டா வேளாண் சந்தையில் தக்காளி விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளது. கூலி மற்றும் போக்குவரத்து செலவுக்கு கூட கட்டுப்படியாகத நிலை தக்காளியை விளைவித்த விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ளது.
இதனால் தான் ஆத்திரம் அடைந்த விவசாயி,அருகில் உள்ள சாலையிலேயே கொட்டி விட்டு சென்றுள்ளார்.

கடந்த ஜூன், ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதம் தொடக்கம் வரை விண்ணை தொட்ட தக்காளி விலை, ஆகஸ்ட் இறுதியில் படிப்படியாக குறைந்து இயல்பு நிலையை அடைந்தது. ஆனால் அதிகப்படியான விளைச்சல் காரணமாக தக்காளி விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளது. தக்காளி விலை சந்தையில் 10 ரூபாய்க்கு கீழ் சரிந்துள்ளது.
ஒரு கிலோ100 ரூபாய், 150 என்று இருந்த போது ஆர்வமுடன் கடந்த ஜுன் மாதத்தில் தக்காளியை பயிரிட்ட விவசாயிகள் அறுவடை முடிந்த தக்காளியை விற்பனை கொண்டு சென்ற நிலையில் பேரதிர்ச்சி தரும் வகையில் தக்காளி விலை 10 ரூபாய்க்கு கீழ் தான் உள்ளது. ஒரு சில இடங்களில் தான் தக்காளி விலை 15 ரூபாய் அளவிற்கு எடுக்கிறார்கள்.
தற்போதைய நிலையில் தக்காளி விலை சரிவின் தாக்கம் சென்னை போன்ற பெருநகரங்களில் இன்னமும் எதிரொலிக்கவில்லை. சென்னையில் தக்காளி விலை தற்போது 25 முதல் 30 ரூபாய் என்கிற அளவில் உள்ளது. அதேநேரம் தக்காளி அதிகம் விளையும் தருமபுரி, திண்டுக்கல், தேனி உள்ளிட்ட பல மாவட்டங்களில் கிலோ 10 ரூபாய் என்கிற அளவிற்கு வீழ்ச்சி அடைந்துள்ளது.
பழநி தக்காளி மார்க்கெட்டில் 14 கிலோ கொண்ட ஒரு பெட்டி தக்காளி நேற்று ரூ.100 முதல் ரூ.150 வரை மட்டுமே விற்பனையாகி வருகிறது. அதாவது ஒரு கிலோ தக்காளி மொத்த மார்க்கெட்டில் அதிக பட்சமாக ரூ.10 முதல் ரூ.12-க்கு விற்பனையாகி வருகிறது.
தக்காளி விலை உயர்வை கண்ட தர்மபுரி மாவட்டத்தில் பாலக்கோடு, மாரண்டஅள்ளி, பஞ்சப்பள்ளி, பெல்ரம்பட்டி உள்ளிட்ட பகுதி விவசாயிகள் அதிகளவில் தக்காளி சாகுபடி செய்திருந்தனர். இங்கு அறுவடை செய்யப்படும் தக்காளிகள் பாலக்கோட்டில் உள்ள தக்காளி மார்க்கெட்டிற்கு விற்பனைக்கு கொண்டு வரப்படும். இந்நிலையில் நேற்றைய நிலவரப்படி 15 கிலோ எடை கொண்ட ஒரு கிரேடு தக்காளி 100 ரூபாய்க்கும், ஒரு கிலோ தக்காளி 6 முதல் 7 ரூபாய்க்கும் விற்பனையானது.இதனால் விவசாயிகள் கடும் வேதனை அடைந்தனர்.
தக்காளி பயிரிட்ட விவசாயிகள் பலர் மிகப்பெரிய நஷ்டத்தை சந்தித்து வருவதால், அரசு அவர்களுக்கு நிவாரணம் அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. விளைவிக்கு பொருட்களை சரியான விலையை கூட நிர்ணயிக்க முடியாத நிலையை எண்ணி தக்காளி விவசாயிகள் தற்போது வேதனையில் உள்ளனர்.












Click it and Unblock the Notifications