ஆந்திராவில் கனமழை- வெள்ளம்: சென்னையில் இருந்து செல்லும் 40 பேருந்துகள் நிறுத்தம்
ஹைதராபாத்: ஆந்திராவில் நெல்லூர், கடப்பா, சித்தூர் மாவட்டங்களில் பெய்த கன மழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தொடர்மழை காரணமாக சென்னையில் இருந்து ஆந்திரா செல்லும் 40 பஸ்கள் நிறுத்தப்பட்டுள்ளன.
மழை வெள்ளத்தில் நெல்லூர் அருகே பாலம் உடைந்து விட்டதால் கோயம்பேட்டில் இருந்து நெல்லூர் செல்லும் 20 ஆந்திர மாநில பஸ்கள் செல்லாமல் இன்று நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதே போல் விஜயவாடா, ஐதராபாத், விசாகப்பட்டினம் செல்லும் 12 பஸ்களும் இன்று செல்லவில்லை.

சித்தூர் மாநகராட்சி மேயர் அனுராதா சுட்டுக்கொல்லப்பட்டதால் அங்கு பதட்டம் நிலவி வருகிறது. இதனால் சித்தூர் செல்லும் 8 பஸ்களும் புறப்படாமல் கோயம்பேட்டில் நிறுத்தப்பட்டுள்ளது. இதே போல் அங்கிருந்து வரும் பஸ்களும் வரவில்லை. தமிழக அரசு பஸ்களும், நெல்லூர், சித்தூர் செல்லவில்லை.
திருப்பதி செல்லும் பேருந்துகள் கோயம்பேட்டில் இருந்து செல்கிறது. திருத்தணி அருகே வெள்ளம் கரைபுரண்டு ஓடினாலும் திருவாலங்காடு ஊத்துக்கோட்டை வழியாக மாற்றுப் பாதையில் பஸ்கள் செல்கின்றன.

ஆந்திராவில் பல்வேறு பகுதிகளில் பெய்துவரும் வடகிழக்குப் பருவமழையினால் 6 பேர் உயிரிழந்துள்ளனர். 3 ஆயிரத்து 155 ஹெர்டர் பரப்பிலான பயிர்கள் சேதமடைந்துள்ளன. சித்தூர் மற்றும் நெல்லூரில் வெள்ளத்தில் சிக்கியுள்ளவர்களை மீட்க சென்னையில் இருந்து இரண்டு ஹெலிகாப்டர்கள் புறப்பட்டுச் சென்றுள்ளன. அவசர தேவைக்காக நெல்லூரில் 5 ஹெலிகாப்டர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

அப்பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு அதிகாரிகள் விழிப்புடன் இருக்கும் படி அம்மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு அறிவுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்திய அவர், தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கும்படி கேட்டுக்கொண்டார்.மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரண நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும் என்று கூறிய முதலமைச்சர், மழையால் பாதிக்கப்பட்டவர்கள் ஒவ்வொருவருக்கும் 20 கிலோ அரசி, 2 லிட்டர் மண்ணெண்ணெய் ஆகியவற்றை உடனடியாக வழங்க உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications