ராஜஸ்தான், -காஷ்மீரில் கனமழை.. மீட்புப் பணியில் ஹெலிகாப்டர்.. இயல்பு வாழ்க்கை கடும் பாதிப்பு
பில்வாரா/ஸ்ரீநகர்: ராஜஸ்தான், ஜம்மு காஷ்மீர் உள்ளிட்ட வட மாநிலங்களில் தொடரும் கனமழை மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. ராஜஸ்தானில் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஹெலிகாப்டர் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
ராஜஸ்தானில் பெய்து வரும் தொடர் கனமழையால் பில்வாரா, சித்தோஸ்கர் உள்ளிட்ட மாவட்டங்களில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. அங்கு வெள்ளத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் மீட்பு பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. மேலும், வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

பில்வாரா அருகே ஆற்று வெள்ளத்தில் சிக்கிய பள்ளி வாகனத்திலிருந்து மாணவர்கள் 40 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர். இந்நிலையில் அங்குள்ள கிராமம் ஒன்றில் வெள்ளம் சூழந்த கோயிலினுள் சிக்கித் தவித்த மேலும் 4 பேர் ஹெலிகாப்டர்கள் மூலம் மீட்கப்பட்டனர்.
வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் மாவட்ட நிர்வாகம் முழு வீ்ச்சில் ஈடுபட்டுள்ளதாக பில்வாரா மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். சித்தோஸ்கர், பரண், ஜலாவர், கோட்டா மற்றும் பல பகுதிகளிலும் கனமழை மற்றும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளது.

காஷ்மீரிலும்....
ஜம்மு காஷ்மீரிலும் கனமழை பெய்து வருகிறது. இதனால், மழை நீர் மற்றும் சாக்கடை நீர் ஒன்றாக கலந்துள்ளதால் தொற்று நோய் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கனமழை காரணமாக பல இடங்களில் மண் சரிவும் ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் பாதுகாப்பான இடங்களில் தஞ்சமடைந்துள்ளனர். ரஜோரி மாவட்டத்தின் பெரும்பாலான இடங்களில் சாலைகள் சேதமடைந்துள்ளதால் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications