மூணாறில் சூறாவளி காற்று- மழை: சாலைகளில் பாறைகள் விழுந்து போக்குவரத்து பாதிப்பு
மூணாறு: தமிழக-கேரள எல்லையான மூணாறில் கனமழையும்,சூறாவளி காற்றும் வீசி வருகிறது. பலத்த மழை காரணமாக மூணாறு-மதுரை மலைச்சாலையில் பாறைகள் உருண்டு விழுந்துள்ளதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.
கேரள மாநிலம் மூணாறில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. கடந்த ஒரு வாரகாலமாக பெய்து வரும் மழையால் ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. நகரின் முக்கிய சாலைகளில் உள்ள மின்கம்பங்கள் சாய்ந்து சாலையில் விழுகின்றன. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்படைந்து வருகிறது.

மூணாறில் இருந்து கொச்சி, தேனி, போடி, மதுரை, குமுளி மற்றும் நெடுங்கண்டம் ஆகிய ஊர்களுக்கு செல்லும் மலைச்சாலையில் நேற்று பெய்த பலத்த மழை காரணமாக பாறைகள் உருண்டு விழுந்துள்ளன. இதனால் மலைச்சாலையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.
நெடுஞ்சாலைத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பாறை விழுந்த இடங்களை பார்வையிட்டனர். அவற்றை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அந்த பாதையில் நின்றுகொண்டிருந்த வாகனங்கள் அனைத்தும் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டன.
சாலைகளில் விழுந்த பாறைகள் பெரிய அளவில் இருப்பதால் அவற்றை பொக்லைன் எந்திரம் மற்றும் வெடிபொருட்களை பயன்படுத்தி அப்புறப்படுத்த திட்டமிட்டுள்ளனர். இதனால் இன்னும் சில தினங்களுக்கு இந்த சாலைகளில் பேருந்து உள்ளிட்ட வாகனங்கள் செல்லமுடியாது.












Click it and Unblock the Notifications