ஜெ. தீர்ப்பு எதிரொலி: கர்நாடக ஹைகோர்ட்டில் 1,000 போலீசார் குவிப்பு, 5 அடுக்கு பாதுகாப்பு!
பெங்களூரு: ஜெயலலிதா தீர்ப்பு வழங்கப்படும் கர்நாடக ஹைகோர்ட்டில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர். ஐந்தடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
ஜெயலலிதா அப்பீல் வழக்கில் கர்நாடக ஹைகோர்ட் இன்று தீர்ப்பு வழங்க உள்ள நிலையில், பெங்களூருவில் அதிமுகவினர் குவிந்து வருகின்றனர்.
ஜெயலலிதாவுக்கு தீர்ப்பு வழங்கப்படும் நேரத்தில் கோர்ட்டுக்குள் அவர்கள் நுழைந்து விடக்கூடாது என்பதற்காக கோர்ட் வளாகத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. காலை 6 மணி முதல் மாலை 6 மணிவரை கோர்ட்டை சுற்றி 1 கி.மீ தூரத்துக்கு 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், நான்கு பேருக்கு மேல் அங்கு நிற்க முடியாது.

ஹைகோர்ட் வளாகத்தில், 2 டி.சி.பி, 20 ஏ.சி.பி, கர்நாடக ரிசர்வ் போலீஸ் படையின் 10 பட்டாலியன் குழு, ஆயுதப்படையின் 3 பட்டாலியன் குழு உட்பட 1000த்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர் என்று நகர போலீஸ் கமிஷனர் எம்.என்.ரெட்டி, 'ஒன் இந்தியாவிடம்' தெரிவித்தார்.
பத்திரிகையாளர்கள் தீர்ப்பு வழங்கப்படும் நேரத்தில் கோர்ட் வளாகத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள் என்று மத்திய மண்டல போலீஸ் துணை கமிஷனர் சந்தீப் பாட்டீல் தெரிவித்தார்.
கோர்ட்டின் பல பகுதிகளிலும் மெட்டல் டிடெக்டர்கள் கூடுதலாக நிறுவப்பட்டுள்ளன. மோப்ப நாய்களுடன் போலீசார் ரோந்து சுற்றி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications