ஸ்ரீநகரில் பனிமழை -ராகுல் யாத்திரை நிறைவு- பிரியங்கா, திருச்சி சிவா, உமர் அப்துல்லா பங்கேற்பு!
ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரை ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் நிறைவடைந்துள்ளது.
ஸ்ரீநகர்: காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தியின் பாதயாத்திரை நிறைவு பொதுக் கூட்டம் ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகரில் இன்று கொட்டும் பனிமழைக்கு நடுவே நடைபெற்றது. இதில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, திமுக எம்பி திருச்சி சிவா, ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தமிழ்நாட்டின் கன்னியாகுமரியில் கடந்த ஆண்டு செப்டம்பர் 7-ந் தேதி கன்னியாகுமரியில் ராகுல் காந்தி பாதயாத்திரையை தொடங்கினார். இந்த யாத்திரையை திமுக தலைவரும் தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். கடந்த 5 மாதங்களாக தொடர்ச்சியாக நடைபயணம் மேற்கொண்ட ராகுலின் பயணம் தற்போது ஸ்ரீநகரில் நிறைவடைந்துள்ளது.
கேரளா, கர்நாடகா, தெலுங்கானா, ஆந்திரா, மகாராஷ்டிரா, ராஜஸ்தான், ஹரியானா, டெல்லி, உத்தரப்பிரதேசம், பஞ்சாப், ஹிமாச்சல பிரதேசங்கள் வழியாக ஜம்மு காஷ்மீரை சென்றடைந்தது ராகுல் காந்தியின் பயணம். நாடு முழுவதும் பல இடங்களில் எதிர்க்கட்சித் தலைவர்கள், துறைசார் வல்லுநர்கள் ராகுலின் பயணத்தில் இணைந்து தங்களது ஆதரவை வெளிப்படுத்தினர்.
ராகுல் காந்தியின் பயணம் ஸ்ரீநகரில் நிறைவடைந்துள்ளது. ஸ்ரீநகரின் பாந்தா செளக்கில் இருந்து 8 கி.மீ. தூரம் நேற்று ராகுல் பாதயாத்திரை மேற்கொண்டார். பின்னர் லால் செளக்கில் ராகுல் காந்தி தேசியக் கொடி ஏற்றினார். 75 ஆண்டுகளுக்கு முன்னர் இதே லால் சவுக்கில் ராகுலின் தாத்தா ஜவஹர்லால் நேரு கொடி ஏற்றும் புகைப்படங்களையும் ராகுல் கொடியேற்றும் படத்தையும் இணைந்து காங்கிரசார் பகிர்ந்து கொண்டனர். முன்னதாக அப்பகுதியில் பனிக்கட்டிகளை சகோதரி பிரியங்கா மீது எறிந்து இருவரும் விளையாடிய காட்சியை அனைவரும் ரசித்தனர்.
‛ஜெயிட்டோம் மாறா’.. காஷ்மீரில் முடிந்த பாரத் ஜோடோ யாத்திரை..ராகுல் போட்ட நெகிழ்ச்சி பதிவு! என்ன?
இதனைத் தொடர்ந்து இன்று ஸ்ரீநகர் எஸ்கே மைதானத்தில் ராகுல் காந்தியின் பாதயாத்திரை நிறைவு பொதுக் கூட்டம் நடைபெற்றது. இப்பொதுக் கூட்டம் தொடங்கும் போது அப்பகுதியில் கனமான பனிமழை கொட்டியது. இக் கூட்டத்தில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, பிரியங்கா காந்தி, ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் பதுல்லா, இடதுசாரித் தலைவர் டி.ராஜா, திமுக எம்பி திருச்சி சிவா, விசிக தலைவர் தொல்.திருமாவளவன் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர்.