சந்திரபாபு நாயுடு சென்ற ஹெலிகாப்டர் வழி தவறியது.. பைலட்டுக்கு பறந்த ATC எச்சரிக்கை.. பெரும் பதற்றம்!
விசாகப்பட்டினம்: ஆந்திர முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு சென்ற ஹெலிகாப்டர் வழி தவறியதால் பெரும் பதற்றம் ஏற்பட்டது.
ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சரும், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு விசாகப்பட்டினத்தில் இருந்து அல்லூரி சீதாராமன் ராஜூ மாவட்டத்தில் உள்ள அரக்கு பகுதிக்கு ஒரு விழாவில் பங்கேற்பதற்காக ஹெலிகாப்டரில் புறப்பட்டார்.

விசாகப்பட்டினத்தில் இருந்து சந்திரபாபு நாயுடு ஹெலிகாப்டரில் புறப்பட்ட நிலையில், அவர் சென்ற ஹெலிகாப்டர் வழிதவறிச் சென்றது. இதனால் பெரும் பதற்றம் ஏற்பட்ட நிலையில், விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அதிகாரிகள், ஹெலிகாப்டரின் பைலட்டுக்கு எச்சரிக்கை விடுத்து தகவல் அனுப்பினர்.
விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு மையத்துடன் ஒருங்கிணைப்பில் இடையூறு ஏற்பட்டதால் ஹெலிகாப்டர் வழி தவறியது. ஹெலிகாப்டரின் விமானிக்கு விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அறை எச்சரிக்கை விடுத்ததை தொடர்ந்து, மீண்டும் சரியான பாதையில் ஹெலிகாப்டர் பயணத்தை தொடர்ந்தது. தொடர்ந்து, பாதுகாப்பாக அரக்கு பகுதியில் தரையிறங்கியது.
திறன் மேம்பாட்டு ஊழல் வழக்கில் ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டு இருந்தார். சந்திரபாபு நாயுடுவுக்கு உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கிய நிலையில் அவர் தற்போது வெளியில் உள்ளார். ஜாமீன் உத்தரவை எதிர்த்து ஆந்திர அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications