பெண் ஓவியர் ஹேமா, வக்கீலை கொலை செய்ய ரூ. 5 லட்சம் கூலி: கைதான இருவர் வாக்குமூலம்
மும்பை: மும்பையைச் சேர்ந்த பிரபல பெண் ஓவியர் ஹேமா உபாத்யா மற்றும் அவரது வக்கீல் கொல்லப்பட்டு அட்டைப்பெட்டியில் வைத்து வீசப்பட்ட வழக்கில், வாரணாசியில் 2 பேர் சிறப்பு அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். முதல் கட்ட விசாரணையில் பணம் கொடுக்கல், வாங்கல் பிரச்சினையில் இந்த இரட்டை கொலை நடந்துள்ளது என்றும், இரட்டை கொலையை செய்வதற்காக ரூ.5 லட்சம் பண பரிமாற்றம் நடந்துள்ளது என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
மும்பை காண்டிவிலியை சேர்ந்த பெண் ஓவியர் ஹேமா, 40 அவரது வக்கீல் ஹரிஷ் பம்பானி, 63 ஆகியோர் கொடூரமான கொலை செய்யப்பட்டனர். அவர்களின் உடல்கள் அட்டைபெட்டிக்குள் அடைத்து வைக்கப்பட்ட நிலையில் பிணமாக சாக்கடையில் இருந்து கண்டெடுக்கப்பட்டது. டெல்லியில் இருந்த ஹேமாவின் கணவர் சிந்தன், மனைவி கொலை செய்யப்பட்டதை அறிந்ததும் உடனடியாக மும்பை திரும்பினார்.
விவாகரத்துக்கு கேட்டு ஹேமா நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்த நிலையில், இந்த கொலை நடந்திருப்பதால் முதலில் போலீசார் சிந்தன் மீது சந்தேகம் அடைந்தனர். நேற்று அவர் மும்பை திரும்பியதும் விசாரணை நடத்தி வாக்குமூலத்தை பதிவு செய்தனர். தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், கொலை செய்யப்பட்ட இருவரது உடல்களும் டெம்போ மூலம் கொண்டு வரப்பட்டு சாக்கடையில் வீசப்பட்டிருந்தது தெரியவந்தது. கண்காணிப்பு கேமரா மூலம் சம்மந்தப்பட்ட டெம்போ டிரைவரை கண்டறிந்து போலீசார் அவரை பிடித்து விசாரணை நடத்தினார்கள்.

2 பேர் கைது
அப்போது, சார்க்கோப் பகுதியை சேர்ந்த குடோன் உரிமையாளர் ஒருவர் தன்னிடம், உடைந்த கலைபொருட்கள் அட்டை பெட்டிகளில் அடைத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து, அதை சாக்கடையில் வீசிவிடும்படி ஏற்றி அனுப்பியதாக தெரிவித்தார்.
அவர் கொடுத்த தகவலின் பேரில் போலீசார் சம்மந்தப்பட்ட குடோன் உரிமையாளர் உள்பட 4 பேர் பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வாரணாசியில் கைது
இதற்கிடையே, ஹேமாவிடம் கடைசியாக சிவகுமார் சாது ராஜ்பர் என்ற வாலிபர் பேசியிருந்ததும், அவர் தலைமறைவாக இருப்பதும் தெரியவந்தது. இதனால் அவர்மீது சந்தேகமடைந்த போலீசார் அவரது செல்போன் எண் இருக்கும் இடத்தை ஆராய்ந்த போது, அவர் உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் இருப்பதை கண்டுபிடித்தனர். இதையடுத்து விமானம் மூலம் வாரணாசி சென்று, அங்குள்ள ஒரு ஓட்டல் அறை எடுத்து தங்கியிருந்த சிவகுமார் சாது ராஜ்பர் மற்றும் அவரது நண்பர் ஆகியோரை உள்ளூர் போலீசார் உதவியுடன் மும்பை குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.

விசாரணை
பின்னர் இருவரும் நேற்று மாலை மும்பை கொண்டு வரப்பட்டனர். கைதான இருவரிடமும் போலீசார் தனித்தனியாக விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில் பணம் கொடுக்கல், வாங்கல் பிரச்சினையில் இந்த இரட்டை கொலை நடந்துள்ளது என்று தெரியவந்தது.

கொலையின் பின்னணி
இரட்டை கொலையை செய்வதற்காக ரூ.5 லட்சம் பண பரிமாற்றம் நடந்துள்ளது என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர். முழுமையான விசாரணைக்கு பின்னரே இந்த இரட்டை கொலையின் பின்னணியில் உள்ளவர்கள் யார்? யார்? என்பது தெரியவரும் என்று குற்றப்பிரிவு துணை கமிஷனர் தனஞ்செய் குல்கர்ணி தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications