Exclusive: ஆதார் வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பால் பல அதிரடி மாற்றங்கள் நிகழும்: வழக்கறிஞர் பிரசன்னா
டெல்லி: குடிமக்களின் அந்தரங்கம் என்பது அடிப்படை உரிமை என்று உச்சநீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பு வழங்கியது. 9 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன பெஞ்ச், வரலாற்று சிறப்புமிக்க இந்த தீர்ப்பை வழங்கியது. இந்த வழக்கில், அந்தரங்க உரிமையை நிலைநாட்ட வாதாடிய வழக்கறிஞர்களில் ஒருவர்தான் தமிழரான எஸ்.பிரசன்னா. மூத்த வழக்கறிஞரான பிரசன்னா, ஒன்இந்தியாவுக்கு அளித்த சிறப்பு பேட்டி:
கேள்வி: அரசியல் சாசனத்தின் 21வது பிரிவின் 3வது துணைப் பிரிவில் கூறியுள்ளபடி, அந்தரங்கம் என்பது அடிப்படை உரிமை என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ள நிலையில், ஆதார் திட்டத்திற்காக தகவல்களை சேகரித்ததை எப்படி நியாயப்படுத்த முடியும்?
பிரசன்னா: 2016 வரையில் ஆதார் திட்டத்திற்கு வலு சேர்க்க எந்த சட்டமும் கிடையாது. 2016க்கு முன்பாக சேகரிக்கப்பட்ட தகவல்களுக்கு சட்ட பாதுகாப்பு கிடையாது. எனவே, என்னை பொறுத்தளவில், அந்த தகவல்கள் அழிக்கப்பட வேண்டும். தகவல்களை பாதுகாக்க நமது நாட்டில் விரைவில் சட்டம் வரும் என எதிர்பாக்கிறேன். சட்ட மசோதா உருவாக்கும் பணிக்காக கமிட்டி அமைக்கப்படும் என்று எதிர்பார்க்கிறேன்.

கேள்வி: ஏழைகளின் வாழும் உரிமையை, செல்வந்தர்களின் அந்தரங்க உரிமை நசுக்கும் என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம் செய்தது. ஆனால் உச்சநீதிமன்றமோ, அந்தரங்கம் அடிப்படை உரிமை என தீர்ப்பளித்துள்ளது. மத்திய அரசு மற்றும் உச்சநீதிமன்றம் இந்த விஷயத்தில் முரண்பட்டுள்ள நிலையில், மத்திய அரசு இந்த விஷயத்தில் இறுதி முடிவை எடுக்க வாய்ப்புள்ளதா?
பிரசன்னா: இது நகைப்புக்குரிய விஷயமாக உள்ளது. அந்தரங்கம் என்பது அடிப்படை உரிமைதான். ஏழைகள் தங்களுக்கு அந்தரங்கம் தேவையில்லை என்று ஒருபோதும் கூறவில்லையே. அரசுதான், அந்தரங்க உரிமையா அல்லது ஏழ்மையா என இரு 'சாய்ஸ்களை' வழங்கியது. அரசுக்கு அந்தரங்கம் என்றால் என்ன என்றும் தெரியவில்லை, ஏழ்மை குறித்தும் புரியவில்லை. சம உரிமை என்பது செல்வந்தர்களின் தேர்வாக இருக்கும் என சிலர் நினைக்கலாம், ஆனால் நடைமுறை வேறு.
கேள்வி: பாலின தேர்வு என்பது குடிமக்களின் தனிப்பட்ட விவகாரம் என்று உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில் கூறியுள்ளது. அப்படியானால், வருங்காலத்தில் சட்டப்பிரிவு 377 (ஹோமோசெக்சை கிரிமினல் குற்றமாக வரையறுப்பது) செல்லாது என்று ஆகிவிடுமல்லவா?
பிரசன்னா: அந்த சட்டப்பிரிவு செல்லாது என அறிவிக்க வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. இதில் நீதிமன்றமே முடிவெடுக்க உள்ளது என்பது நல்ல விஷயம். நாடாளுமன்றத்தின் கருணையை எதிர்பார்க்க தேவையில்லை. இது கொண்டாடப்பட வேண்டியதுதான்.
கேள்வி: அந்தரங்கம் அடிப்படை உரிமை என்று உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பால், ஏற்படப்போகும் தடைகள்/மாற்றங்கள் எவை?
பிரசன்னா: தனி நபர் மீது அரசு ஏதேனும் நடவடிக்கை எடுக்கும்போது, அதற்கு உரிய காரணத்தை தெரிவிக்க வேண்டிவரும். எதிர்ப்பை அரசு தாண்டியாக வேண்டிவரும்.
கேள்வி: முந்தைய வழக்குகள் அல்லது முந்தைய தீர்ப்புகள் ஏதேனும் இந்த தீர்ப்பால் பாதிக்கப்படுமா?
பிரசன்னா: பல்வேறு திட்டங்களில் இந்த தீர்ப்பு தாக்கம் ஏற்படுத்தும். உதாரணத்திற்கு, மக்களுக்கு டிஎன்ஏ சோதனை செய்ய வழிகோலும் அரசின் சட்டம் சிக்கிக்கொள்ளும்.












Click it and Unblock the Notifications