உதய்பூர் டெய்லர் கொலை நினைவு இருக்கா? அதே பகுதியில் இந்துக்கள் - இஸ்லாமியர்கள் சேர்ந்து நடத்திய விழா
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் சமீபத்தில் இஸ்லாமியர்களின் புனித நிகழ்வான மொஹரம் பண்டிகையையொட்டி நடைபெற்ற 'தாஜியா' கொண்டு செல்லும் விழாவில் திடீரென ஏற்பட்ட தீ விபத்து பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதனையடுத்து உடனடியாக இந்து மதத்தை சேர்ந்த குடும்பத்தினர் தீயை அணைத்துள்ளனர். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது.
சில நாட்களுக்கு முன்னர் பாஜக முன்னாள் செய்தி தொடர்பாளர் நுபுர் சர்மா, 'நபிகள் நாயகம் குறித்து' தெரிவித்திருந்த கருத்துக்கு ஆதரவு தெரிவித்ததாக இந்த பகுதியில் தையல் கடைக்காரர் ஒருவர் கொடூரமான முறையில் இஸ்லாமியர்களால் கொலை செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஊர்வலம்
உலகம் முழுவதும் கடந்த 9ம் தேதி மொஹரம் பண்டிகை இஸ்லாமியர்களால் அனுசரிக்கப்பட்டது. இதன் ஒரு பகுதியாக ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில், இமாம் ஹுசைனின் கல்லறையின் பிரதியான தாஜியாவை ஊர்வலமாக கொண்டு சென்றுகொண்டிருந்தனர். இந்த தாஜியா பெரும்பாலும் தேர்போல வடிவமைக்கப்பட்டிருக்கும். ஆனால் இதற்கு சக்கரங்கள் இருக்காது. இதை இஸ்லாமியர்கள் கையில்தான் தூக்கிச் செல்வார்கள். உதய்பூரில் இவர்கள் வடிவமைத்திருந்த தாஜியா சுமார் 25 அடி உயரம் இருந்தது.

விபத்து
இந்த ஊர்வலம் மொச்சிவாடா தெருவில் குறுகிய பாதைகள் வழியாகச் சென்றபோது இந்த தாஜியா மீது திடீரென தீ பிடித்துக்கொண்டது. தாஜியாவின் பின்னால் சென்று கொண்டிருந்த பக்தர்கள் இதை கவனிக்க தவறிவிட்டனர். மாடியிலிருந்து இந்த நிகழ்ச்சியை கண்டுகொண்டிருந்த சிலர்தான் உடனடியாக இதனை கவனித்தனர். பின்னர் உடனடியாக தீயை அணைக்கத் தொடங்கினர். மாடியிலிருந்த அவர்கள் தங்கள் வீடுகளிலிருந்து தண்ணீரை கொண்டு வந்து ஊற்றி தீயை அணைத்தனர்.

தீ அணைப்பு
ஆஷிஷ் சோவாடியா, ராஜ்குமார் சோலங்கி மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள்தான் தங்கள் பால்கனியிலிருந்து தீயை அணைத்துள்ளதாக உள்ளூர் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் இந்து மதத்தை சேர்ந்தவர்களாவார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஏனெனில், சில நாட்களுக்கு முன்னர்தான் சம்பவம் நடந்த பகுதியிலிருந்து சில மீட்டர் தொலைவில் ஒரு இந்து தையல் கடைக்காரர், நுபுர் சர்மாவின் பேச்சுக்கு ஆதரவு தெரிவித்ததாக கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டார். இக்கொலையை செய்த இஸ்லாமிய இளைஞர்கள் அதனை நேரலையும் செய்திருந்தனர்.

நெகிழ்ச்சி
இது மாநிலம் முழுவதும் மதக்கலவரத்திற்கு ஒரு தொடக்கப்புள்ளியாக அமைந்து விடுமோ என அனைவரும் பயந்துகொண்டே இருந்தனர். இந்த பின்னணியில் மேற்குறிப்பிட்ட நெகிழ்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. ஆஷிஷ் சோவாடியாவின் குடும்பத்தினரின் இந்த செயலானது பெரும் அசம்பாவிதத்தை தவிர்த்துள்ளது மட்டுமல்லாது, மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாகவும் அமைந்தது. அதேபோல அனைவரது மனதையும் இது வென்றுள்ளது என மாவட்ட ஆட்சியர் தாரா சந்த் மீனா தெரிவித்துள்ளார்.
இந்த தீ விபத்து ஷார்ட் சர்க்யூட் காரணமாக அல்லது ஊதுவத்திகளில் இருந்து பறந்து வந்த தீப்பொறி மூலமாக உருவாகியிருக்கலாம் என மூத்த போலீஸ் அதிகாரி ஷிப்ரா ரஜாவத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications