Bihar Election: பீகாரில் இதுவரை இல்லாத அளவு அதிக வாக்குப்பதிவு! உணர்த்துவது என்ன? யாருக்கு சாதகம்?
பாட்னா: பீகார் சட்டசபை தேர்தல் முதல்கட்ட வாக்குப்பதிவு இன்று 121 சட்டசபை தொகுதிகளில் நிறைவடைந்துள்ள நிலையில், இதுவரை இல்லாத அளவாக 64.66% வாக்குகள் பதிவாகியுள்ளன. அதிக வாக்குப்பதிவு எதை உணர்த்துகிறது? யாருக்கு சாதகம்? என அரசியல் அரங்கில் தீவிரமாக அலசப்பட்டு வருகிறது.
பீகார் மாநிலத்தில், சட்டசபை தேர்தல் இன்றும், வரும் 11 ஆம் தேதியும் என இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது. பீகார் சட்டமன்றத் தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெற்று முடிந்தது. பீகாரின் மொத்தமுள்ள 243 சட்டமன்றத் தொகுதிகளில் முதல் கட்டத்தில் 121 சட்டமன்றத் தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

பீகார் தேர்தலை பொறுத்தவரை பாஜக மற்றும் ஐக்கிய ஜனதா தளம் இடம்பெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணி, ராஷ்ட்ரிய ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் தலைமையிலான மகாகட்பந்தன் கூட்டணி மற்றும் பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சி ஆகியவற்றுக்கு இடையேயான மும்முனைப் போட்டி நிலவுகிறது. வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்குத் தொடங்கி மாலை 5 மணிக்கு முடிந்தது.
பீகார் முதற்கட்ட தேர்தலில் 45,341 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடந்தது. அவற்றில் 36,733 கிராமப்புறங்களிலும், 8,608 நகர்ப்புறங்களிலும், 320 மாதிரி வாக்குச் சாவடிகளிலும், 926 அனைத்து பெண்களால் நிர்வகிக்கப்படும் வாக்குச் சாவடிகளிலும், 107 மாற்றுத்திறனாளிகளால் நிர்வகிக்கப்படும் வாக்குச் சாவடிகளிலும் இடம்பெற்றன. இன்று வாக்களிக்கத் தகுதி பெற்ற 3.75 கோடி வாக்காளர்களில் 10.72 லட்சம் பேர் புதிய வாக்காளர்கள்.
பீகாரில் இன்று ஒட்டுமொத்தமாக 64.66% வாக்குப்பதிவு பதிவானதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. பீகாரில் முதல் கட்ட வாக்குப்பதிவு நிலவரத்தை மாவட்ட வாரியாக ஒப்பிடுகையில், பெகுசராய் அதிகபட்சமாக 67.32% வாக்குப்பதிவையும், ஷேக்புரா குறைந்தபட்சமாக 52.36% வாக்குப்பதிவையும் பதிவு செய்துள்ளது.
பீகாரில் முதல் கட்ட வாக்குப்பதிவில் 64.6% வாக்குப்பதிவு நடந்துள்ளது.
கடந்த 25 ஆண்டுகளில் வாக்காளர் வாக்குப்பதிவு 60 சதவீதத்தைத் தாண்டியது இதுவே முதல் முறை. 1990, 1995 மற்றும் 2000 ஆம் ஆண்டுகளின் முந்தைய தேர்தல்களிலும் வாக்குப்பதிவு எண்ணிக்கை 60 சதவீதத்தை தாண்டியது குறிப்பிடத்தக்கது. 2020 பீகார் சட்டசபை தேர்தலுடன் ஒப்பிடும்போது, இந்த முறை வாக்காளர்கள் அதிக அளவில் வாக்கு செலுத்தி உள்ளனர். 1951 ஆம் ஆண்டு முதல் வரலாற்றுச் சிறப்புமிக்க வாக்குப்பதிவை பதிவு செய்ததற்காக தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பீகார் வாக்காளர்களை பாராட்டியுள்ளார்.
முதல் கட்டத் தேர்தலில் பீகாரின் ஒட்டுமொத்த வாக்காளர் எண்ணிக்கை அதிகரிப்பதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. கடந்த முறையுடன் ஒப்பிடும்போது அதிகரித்த வாக்காளர் எண்ணிக்கை, தேர்தல் உற்சாகத்தை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது. அதிக வாக்குப்பதிவு எதை உணர்த்துகிறது என்ற விவாதங்களும் எழுந்துள்ளன.
அதிக வாக்குப்பதிவு யாருக்குப் பயனளிக்கிறது? இது ஆட்சிக்கு எதிரானதா, மாற்றத்திற்கானதா? அல்லது நிதிஷ் குமார் ஆட்சிக்கான மக்களின் பரிசா? பதில் தெளிவாக இல்லை, ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) மற்றும் சவாலான மகாகத்பந்தன் இரண்டு அணிகளுமே, வாக்குப்பதிவு அதிகரிப்பது தங்களுக்குச் சாதகம் என்றே கூறுகின்றன.
வரலாற்று ரீதியாக, அதிக வாக்குப்பதிவு பெரும்பாலும் மாற்றத்திற்காக ஆர்வமுள்ள வாக்காளர்களால் நிகழ்வது. ஆட்சிக்கு எதிரான ஒரு அறிகுறியாக கருதப்படுகிறது. வாக்கு சதவீதம் அதிகரிப்பு எதிர்க்கட்சிகளுக்கு சாதகம் என்பதால், இது தேஜஸ்வி யாதவ் தலைமையிலான மகாகத்பந்தன் கூட்டணிக்கு உற்சாகம் கொடுத்துள்ளது.
அதேசமயம், வரலாற்று சிறப்புமிக்க வாக்குப்பதிவை நிதிஷ் குமார் ஆட்சி மற்றும் பிரதமர் நரேந்திர மோடியின் நலத்திட்டங்களின் வெற்றியின் ஒப்புதலாக NDA கூட்டணி கருதுகிறது. பெண் வாக்காளர்கள், மத்திய - மாநில அரசுகளின் திட்டங்களால் அதிகம் பயனடைந்து, தங்களுக்கு ஆதரவாக வாக்குச் செலுத்தி உள்ளதாக அவர்கள் தெரிவிக்கின்றனர். இதில் எந்தக் கூற்று உண்மை என்பது தேர்தல் முடிவுகளில் தான் தெரியவரும்.












Click it and Unblock the Notifications