இந்தி பேசாத மாநிலங்களின் 30 எம்.பிக்களுக்கு இந்தி வகுப்புகள்- உள்துறை அமைச்சகம் ஏற்பாடு!
டெல்லி: இந்தி மொழி பேசாத மாநிலங்களைச் சேர்ந்த 30 எம்.பி.க்களுக்கு இந்தி வகுப்புகள் எடுப்பதற்கு உள்துறை அமைச்சகம் ஏற்பாடு செய்திருப்பது புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது.
மத்தியில் பாரதிய ஜனதா ஆட்சிக்கு வந்தது முதலே இந்தி மொழியை திணிக்கும் முயற்சிகளை மேற்கொள்வதாக குற்றம்சாட்டப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்தி மொழி பேசாத தமிழகம், கேரளா, ஆந்திராம், தெலுங்கானா, ஒடிஷா, மேற்கு வங்கம் மற்றும் வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த 30 எம்.பி.க்களைத் தேர்ந்தெடுத்து இந்தி கற்றுத் தர இருக்கிறது மத்திய அரசு.
இதற்கான ஏற்பாடுகளை உள்துறை அமைச்சகம் மேற்கொண்டுள்ளது. நாடாளுமன்றத்தில் ஹெட்போன்கள் மூலம் இந்திக்கான மொழிபெயர்ப்பு வசதிகள் இருந்தும் தங்களால் பிரதமரோ அல்லது உள்துறை அமைச்சரோ பேசுவதை புரிந்து கொள்ள முடியவில்லை என சில எம்.பி.க்கள் கூறி வருவதால் இந்த ஏற்பாடாம்..
இதற்காக மத்திய இந்தி பயிற்சி நிறுவனத்தின் வல்லுநர்கள் ஏப்ரல் 24 மற்றும் ஏப்ரல் 27-ந் தேதியன்று நாடாளுமன்ற வளாகத்தில் இந்த வகுப்புகளை நடத்த இருக்கின்றனர். இது குறித்து மத்திய இந்தி பயிற்சி நிறுவனத்தின் இயக்குநர் ஜெய் பிரகாஷ் காதம் கூறுகையில், இந்த பயிற்சி வகுப்பு இந்தி மொழியை புரிந்து கொள்ள எளிதாக பேசுவதற்காகனது.. சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இந்த பயிற்சி வகுப்புகள் நடைபெறும் என்றார்.
இவ்வகுப்புகளில் கலந்து கொள்ள மூத்த காங்கிரஸ் தலைவர் கே.வி. தாமஸ், பிஜூ ஜனதா தளத்தின் ரீடா தராய், திரிணாமுல் காங்கிரஸின் தபஸ் மண்டல், மார்க்சிஸ்ட் கட்சியின் சங்கர் தத்தா, தெலுங்கானா ராஷ்டிரிய சமிதியின் வினோத் குமார் உள்ளிட்டோர் ஒப்புதல் தெரிவித்துள்ளனர். இருப்பினும் உள்துறை அமைச்சகத்தின் இந்த ஏற்பாட்டுக்கு தி.மு.க எம்.பி. கே.பி. ராமலிங்கம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.