பதினேழு சிம் கார்டுகள் வைத்து ஆட்டம் காட்டிய ஹனிபிரீத்.. போலீஸ் திடுக்கிடும் தகவல்!
சில நாட்களுக்கு முன் கைது செய்யப்பட்ட ஹனிபிரீத் சிங்,தலைமறைவாக இருந்த போது 17 சிம் கார்டுகள் பயன்படுத்தியதாக போலீஸ் தகவல் தெரிவித்துள்ள்ளது.
டெல்லி : பாலியல் குற்றச்சாட்டில் குற்றம் நிரூபிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் குர்மித் சிங். இவரது வளர்ப்பு மகளான ஹனிபிரித் சிங் கடந்த 38 நாட்களாக போலீசால் தேடப்பட்டு வந்தார் . வெவ்வேறு வழக்குகளில் தேடப்பட்ட இவர் கடந்த 3ம் தேதி கைது செய்யப்பட்டு , தற்போது விசாரணை செய்யப்பட்டு வருகிறார். இவர் தலைமறைவாக இருந்த போது மொத்தம் பதினேழு சிம் கார்டுகள் பயன்படுத்தியதாக போலீஸ் தரப்பு தெரிவித்துள்ளது.
மிகவும் செல்வாக்கு பொருந்திய சாமியாரான குர்மித் சிங் சில நாட்களுக்கு முன் பாலியல் குற்றசாட்டு நிரூபிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார் . பெரும் பரப்பரப்பை ஏற்படுத்திய இந்தத் தீர்ப்பை தொடர்ந்து அவரது வளர்ப்பு மகளான ஹனிபிரித் சிங்கும் போலீசாரால் தேடப்பட்டு வந்தார். கலவரங்களைத் தூண்டியது, தகாத உறவு வைத்துக் கொண்டது , கொலை முயற்சி என இவர் மீது நிறைய வழக்குகள் நிலுவையில் இருந்தன.
வளர்ப்பு தந்தை குர்மித் சிங்குடன் இவர் தகாத உறவு வைத்துக் கொண்டதாக ஹனிபிரித்தின் கணவரால் குற்றம் சாட்டப்பட்டு இருந்தார். இதையடுத்து ஹனிபிரித்தின் கணவர், குர்மித்தின் ஆட்களுக்கு பயந்து தலைமறைவானார். ஹனி பிரித்தை போலீஸ் தேட தொடங்கியதும் அவரும் தலைமறைவாக வாழத்தொடங்கினார்.
இந்நிலையில் மூன்று மாநில போலீசார் ஹனிபிரீத் சிங்கை வலை விரித்து தேடிக்கொண்டிருந்தனர். 38 நாட்களாக எந்த மாநில போலீசின் கண்களிலும் படாமல் லாவகமாக தப்பித்துக் கொண்டிருந்தார் இவர். இந்த நிலையில் இவர் தலைமறைவாக இருந்த 38 நாட்களில் மொத்தம் பதினேழு சிம் கார்ட்டுகள் பயன்படுத்தி வந்தது தெரியவந்துள்ளது.
இவர் பயன்படுத்திய 17 சிம் கார்டுகளில் 2 சிம் கார்டுகள் இன்டர்நேஷனல் சிம் கார்ட் ஆகும். ஹனிபிரீத் சிங் எந்த கேள்விகளுக்கும் சரியாக பத்தி அளிக்காததால் அவர் எப்படி சிம் கார்டுகளை பெற்றார் , யாரிடம் இருந்து பெற்றார் என்ற தகவலை சேகரிக்க போலீஸ் கடும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.