மகராஷ்டிராவில் ஆணவக்கொலை: சாதி மாறி திருமணம் செய்த மகளை எரித்துக்கொன்ற பெற்றோர்
வேறு சாதி இளைஞரை காதலித்து திருமணம் செய்த மகளையும் மருமகனையும் தீ வைத்து கொளுத்தியுள்ளனர். மகாராஷ்டிராவில் இந்த ஆணவக்கொலை சம்பவம் நிகழ்ந்துள்ளது.
அகமதுநகர் : சாதி மாறி திருமணம் செய்தால் ஆணவக்கொலை செய்வது நாடு முழுவதும் அதிகரித்து வருகிறது. மகாராஷ்டிர மாநிலம் அகமதுநகர் மாவட்டத்தில் உள்ள பார்னர் அருகே நிகோஜ் என்ற சிற்றூரில் காதல் திருமணம் செய்து கொண்ட ருக்மணி, மங்கேஷ் ரான்சிங் என்ற புதுமணத்தம்பதியை பெற்றோரே எரித்துக்கொன்றுள்ளனர்.
ருக்மணியின் குடும்பம் உத்தரப்பிரதேசத்தில் இருந்து வந்து மகாராஷ்டிரத்தில் குடியேறியது. இவர்கள் 'பாசி' என்ற தாழ்த்தப்பட்ட சாதியை சேர்ந்தவர்கள்
மங்கேஷ் ரான்சிங் பிற்படுத்தப்பட்ட லோஹர் சாதியை சேர்ந்தவர். இரும்படிக்கும் கருமார் சமூகம்தான் லோஹர் சாதி. இருவரின் காதலுக்கும் ருக்மணியின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
பெற்றோர் உறவினர்களின் எதிர்ப்பையும் மீறி காதலர் ரான்சிங்கை கரம் பிடித்தார் ருக்மணி. ருக்மணியின் தாயார் மட்டும் இந்த திருமணத்தில் பங்கேற்றார். ஆறு மாதங்களுக்கு முன்பு இருவரின் திருமணம் நடந்தது. தங்களை மீறி திருமணம் செய்து கொண்ட இருவரின் மீதும் ருக்மணியின் உறவினர்கள் ஆத்திரம் கொண்டனர்.
ஆண்களுடன் பேசாதே என்று அடித்தார்... விஷம் வைத்து கொன்றேன் - புதுச்சேரி ஸ்டெல்லா
இருவரையும் வாழ விடக்கூடாது என்று நினைத்த அவர்கள் மிரட்டினர். இதனையடுத்து ருக்மணியும், மங்கேஷும் பார்னர் காவல் நிலையத்தில் உயிருக்கு ஆபத்து இருப்பதாக கூறி புகார் பதிவு செய்தனர். உறவாடி கெடுக்க நினைத்த ருக்மணியின் பெற்றோர் ஏப்ரல் 30ஆம் தேதி விருந்துக்கு அழைத்தனர்.
பெற்றோரை நம்பி வீட்டுக்குப்போன ருக்மணியை அடித்தனர். அழுது கொண்டே நள்ளிரவு நேரத்தில் கணவரை போனில் அழைத்த ருக்மணி, தன்னை வீட்டுக்கு வந்து அழைத்துச் செல்லுமாறு கூறவே, மே 1ஆம் தேதி மனைவியை அழைக்க மாமனார் வீட்டுக்கு போனார் மங்கேஷ். அங்கே உத்தரபிரதேசத்தில் இருந்து வந்திருந்த உறவினர்கள், ருக்மணியையும், அவரது கணவனையும் கட்டிவைத்து பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்தனர்.
புதுமணத்தம்பதியரின் மீது நெருப்பை வைத்து விட்டு வீட்டிற்கு வெளியே நின்று கொண்டு அவர்களின் கதறலை ரசித்தனர். ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் இருவரையும் மீட்டு தீக்காயங்களுடன் மருத்துவமனையில் சேர்த்தனர். முழுவதும் எரிந்து போன நிலையில் புனே சசூன் மருத்துவமனையில் 5 நாட்கள் சிகிச்சை பெற்று வந்த ருக்மணி கடந்த 5ஆம் தேதி உயிரிழந்து விட்டார். மங்கேஷ் கவலைக்கிடமான முறையில் உயிருக்கு போராடி வருகிறார்.
பிப்ரவரி மாதம் புகார் கொடுத்த போதே காவல்துறையினர் நடவடிக்கை எடுத்திருந்தால் உயிரை பாதுகாத்திருக்கலாம் என்பது மங்கேஷ் குடும்பத்தினரின் குற்றச்சாட்டாகும். கொலைக்கு காரணமான ருக்மணியின் மாமா கணஷியாம் மற்றும் சித்தப்பா சுரேந்திர பாபுலால்பாரதி என்கிற பில்லு பண்டிட் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். ருக்மணியின் தந்தை ராம ராம்பால் பாரதியா ஆகியோரை அகமதுநகர் போலீசார் தேடி வருகின்றனர்.