அலகாபாத் ஹோட்டலில் பயங்கர தீ விபத்து: 10 பேர் பலி, 12 பேர் படுகாயம்
அலகாபாத்: உத்தரபிரதேச மாநிலம், அலகாபாத் அருகே ஹோட்டல் ஒன்றில் இன்று அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது. இதில் 10 பேர் உயிரிழந்தனர், 12 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
பிரதாப்கர்க்கில் உள்ள அந்த ஹோட்டலில் காலை 5 மணியளவில் ஹோட்டலில் உள்ள மின் இணைப்பில் கசிவு ஏற்பட்டதையடுத்து திடீரென தீப்பற்றியது. இதனால் அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தனர். ஹோட்டலில் தங்கியிருந்தவர்கள் அவசரம் அவசரமாக வெளியேறினர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் மற்றும் காவல் துறையினர் மளமளவென பற்றிய தீயை அணைக்க போராடினர்.
ஒரு வழியாக தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்ட பின், விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி தொடங்கியது. அப்போது சடலமாக 10 பேர் மீட்கப்பட்டனர். படுகாயமடைந்த 12 பேர் மீட்கப்பட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதில் ஐந்து பேரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.