இணைந்த "இலைகள்".. கச்சிதமாக காரியம் சாதித்த "தாமரை"..!
டெல்லி: அண்ணாமலை படத்தில் வருவதைப் போல, ஏகப்பட்ட கணக்குகளைப் போட்டு கூட்டிக் கழித்துப் பார்துத்தான் அதிமுகவின் இரு அணிகளையும் இணைத்துள்ளனர். இந்த இணைப்பில் மிக முக்கியப் பங்கு பாஜக தலைமைக்கும், பிரதமர் மோடிக்கும் இருப்பதாக சொல்லப்படுகிறது.
இந்த இணைப்பில் பாஜகவின் நலன்தான் முக்கியமாக கருத்தில் கொள்ளப்பட்டுள்ளது. அந்த நோக்கில்தான் ஆரம்பத்திலிருந்தே காய் நகர்த்தி வந்துள்ளனர். பாஜகவின் திட்டப்படியும், எண்ணப்படியும் எல்லாமே சரியாக போய்க் கொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. இணைப்பில் ஏற்பட்ட சுணக்கம் மட்டுமே பாஜக எதிர்பாராதது. அதையும் கூட "குருவே நமஹ" என்று கூறி சரி செய்து விட்டனர்.
பிரதமர் மோடியும், பாஜக தலைவர் அமித் ஷாவும் அதிமுக இணைய வேண்டும் என்பதில் ரொம்பவே ஆர்வமாக இருந்துள்ளனர். அதிக அக்கறையும் காட்டியதாக கூறப்படுகிறது. இந்த விவகாரத்தில் தீவிர கவனமும் செலுத்தியதாகவும் சொல்லப்படுகிறது.

தெற்கில் வலுவாக காலூன்ற
தென் மாநிலங்களில் தற்போது கர்நாடகத்தைத் தாண்டி ஆட்சியமைப்பதை கற்பனை கூட செய்து பார்க்க முடியாத நிலையில்தான் உள்ளது பாஜக. காரணம் தமிழகத்தில் திராவிடக் கட்சிகளின் ஆதிக்கமும், கேரளா, ஆந்திராவில் வேறு மாதிரியான சூழல்கள் இருப்பதாலும். இப்படிப்பட்ட பாஜகவுக்கு ஜெயலலிதா மறைவின் மூலமாக எதிர்பாராமல் கிடைத்த நல்ல வாய்ப்புதான் "அதிமுக".

அதிமுகவை வைத்து பாஜகவை வளர்க்க
வளமாகவும், வலுவாகவும் இருந்த கட்சி அதிமுக. எனவே அதை ஏணியாகப் பயன்படுத்தி தமிழகத்தி்ல தனது கட்சியை வளர்க்க விரும்பியது பாஜக தலைமை. இதுதான் ஜெயலலிதா மறைவுக்குப் பின்னரும் ஆட்சி கவிழாமல் அப்படியே நீடிக்க முக்கிய காரணம். அதிமுகவின் அனைத்துப் பிரிவுகளையும் பாஜகதான் கட்டுப்படுத்துகிறது என்ற பொதுவான பேச்சு உள்ளது. இருப்பினும் அதிமுக இணைந்ததில் பாஜகவின் பங்கு மிகப் பெரியது என்பது வெட்ட வெளிச்சமாகியுள்ளது.

மத்திய ஆட்சியில் அதிமுக
அதிமுகவை இணைத்து விட்ட நிலையில் அடுத்து அக்கட்சிக்கு தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம் அளிக்கவுள்ளது பாஜக என்கிறார்கள். அதிமுகவுக்கு குறைந்தது 2 முதல் 3 அமைச்சர்கள் பதவி வரை கிடைக்கவும் வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. அதில் ஒரு கேபினட் பதவியும் உள்ளடக்கம் என்கிறார்கள்.
|
முதல் ஆளாக வரவேற்ற மோடி
அதிமுக இணைப்பை முதல் ஆளாக ஆதரித்து அங்கீகரித்தவர் பிரதமர்தான். மாற்றுக் கட்சியின் அமைச்சரவை மாற்றத்திற்கு பிரதமர் மோடி அதி வேகமாக வாழ்த்து தெரிவித்ததே மோடி இந்த விவகாரத்தில் எந்த அளவுக்கு ஆதரவாக, அக்கறையாக இருந்துள்ளார் என்பதை ஊகிக்க முடியும்.

மாறி மாறி சந்தித்தார்
அதை விட முக்கியமாக இந்த இணைப்புக்கு முன்பாக முதல்வர் எடப்பாடியாரையும், துணை முதல்வர் ஓ.பி.எஸ்ஸையும் டெல்லியில் வைத்து அடுத்தடுத்து பலமுறை சந்தித்தார் பிரதமர் மோடி. எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கே டைம் ஒதுக்க முடியாத அளவுக்கு பிசியாக இருக்கும் பிரதமர், இந்த இரு தலைவர்களுக்கும் அடுத்தடுத்து சந்திக்க வாய்ப்பு கொடுத்ததும் கூட சர்ச்சையானது. ஆனால் பாஜக அதை கண்டு கொள்ளவே இல்லை.

நிதிஷ் குமார் பாணியில்
பீகாரில் எப்படி நிதிஷ் குமாரை தனது அணிக்கு பாஜக கொண்டு வந்ததோ அதேபோல தற்போது எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான கட்சியையும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு இழுத்து வரவுள்ளது பாஜக. இதன் மூலம் தமிழகத்தில் வலுவான ஒரு தோள் அதற்குக் கிடைத்துள்ளது, சவாரி செய்வதற்கு. சொன்னதையெல்லாம் கேட்கும் கட்சியாகவும், தலைவர்களாகவும் அதிமுக மாறியிருப்பதும் பாஜகவுக்கு பெரிய வசதியாகப் போய் விட்டது.
Recommended Video


3வது பெரிய கட்சி
நாடாளுமன்றத்தில் 3வது பெரிய கட்சியாக உள்ளது அதிமுக. அக்கட்சிக்கு லோக்சபாவில் 37 பேரும், ராஜ்யசபாவில் 13 பேரும் உள்ளனர். ஆனால் சரியான தலைவர் இல்லாமல் தடுமாறிக் கொண்டிருக்கும் கட்சி அதிமுக. இதுதான் பாஜகவுக்கு ரொம்ப வசதியாகப் போய் விட்டது. அத்தோடு அதிமுக தலைவர்கள் பலர் மீது பல்வேறு வகையான புகார்கள் உள்ளிட்டவை குவிந்து கிடப்பதும் பாஜகவுக்கு சவுகரியமாக போய் விட்டது.

சசிகலாவும் இல்லை
இடையில் இருந்த பெரிய தடை சசிகலாதான். அவரும் சொத்துக் குவிப்பு வழக்கில் சிறைக்குப் போய் விட்டார். தினகரனையும் இப்போது முடக்கி விட்டனர். இதனால் அதிமுக கிட்டத்தட்ட பழைய நிலைக்குத் திரும்பியுள்ளது. ஆனால் அதற்குள் மக்கள்தான் படாதபாடு பட்டு விட்டனர்.

திமுகவின் மெளனம்
அதிமுகவில் நடப்பதையும், பாஜகவின் செயல்பாடுகளையும் எதிர்க்கட்சிகள் அறிக்கைகள், பேட்டிகள் மூலம் கண்டிக்கின்றனவே தவிர வேறு மாதிரியான எந்த நடவடிக்கையிலும் ஈடுபடவில்லை. குறிப்பாக திமுக வழக்கத்திற்கு விரோதமாக அமைதியாக, நிதானமாக இருந்து வருகிறது. தேவைப்பட்டால் நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வருவோம் என்பதுதான் திமுக தரப்பிலிருந்து வெளியாகியுள்ள ஒரே ஒரே தீவிரமான அறிவிப்பு.

உண்மையிலேயே பலன் கிடைக்குமா?
தமிழகத்தைத் தாண்டிப் போனால் காங்கிரஸ் அல்லது பாஜக இதில் ஏதாவது ஒன்று பலமாக இருக்கும் அல்லது இந்த இரண்டு மட்டும்தான் இருக்கும். ஆனால் தமிழக சூழல் முற்றிலும் வேறானது. இங்கு இந்த இரண்டு கட்சிகளில் காங்கிரஸ் கட்சிக்கு உள்ள பலம் கூட பாஜகவுக்கு இல்லை என்பதே நிதர்சனம். எனவே அதிமுகவை வைத்து தமிழகத்தில் ஆட்சியைப் பிடிப்பது அல்லது அதிகாரத்தைப் பெறுவது என்ற பாஜகவின் கணக்கு எந்த அளவுக்கு வெல்லும் என்பது தெரியவில்லை.












Click it and Unblock the Notifications