"எடுங்க எடுங்க".. உறுதியாக சொன்ன சாம்சன்.. கையை தூக்கிய தவான்.. உறைந்து போன மைதானம்.. என்னாச்சு?
ராஞ்சி: இந்தியா தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இன்று நடைபெற்ற சம்பவம் ஒன்று கவனம் பெற்றுள்ளது.
இந்தியா தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடர் தற்போது நடந்து வருகிறது. டி 20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியில் இடம்பெற்றுள்ள வீரர்களுக்கு ஓய்வு அளிக்க வேண்டும் என்பதால் அவர்களுக்கு இந்த தொடரில் வாய்ப்பு கொடுக்கப்படவில்லை.
இதனால் தவான் தலைமையிலான இளம் அணி வாய்ப்பு பெற்றுள்ளது. தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியை ஏற்கனவே இந்திய அணி இழந்துவிட்டது.
இதையடுத்து இன்று நடக்கும் இரண்டாவது ஒருநாள் போட்டி மிகவும் முக்கியமானது ஆகும்.
தீபக் சாஹர்
இந்த தொடரில் இருந்து தீபக் சாஹர் வெளியேறிவிட்டார். அவருக்கு ஏற்பட்ட காயம் காரணமாக அணியில் இருந்து நீக்கப்பட்டு உள்ளார். இதனால் வாஷிங்டன் சுந்தர் அணிக்குள் வந்துள்ளார். காயம் குணமடைந்த நிலையில் சுந்தர் அணிக்குள் வந்துள்ளது. இன்று ஆடும் இந்திய அணியில் ஷிகர் தவான் (கேப்டன்), சுப்மான் கில், இஷான் கிஷன், ஷ்ரேயாஸ் ஐயர், சஞ்சு சாம்சன் , வாஷிங்டன் சுந்தர், ஷாபாஸ் அகமது, ஷர்துல் தாக்கூர், குல்தீப் யாதவ், முகமது சிராஜ், அவேஷ் கான் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர் .
ருத்துராஜ்
இந்திய அணியில் இன்று ருத்துராஜ் இடம்பெறவில்லை. அவருக்கு பதிலாக ஷாபாஸ் அகமது அணியில் சேர்க்கப்பட்டு உள்ளார். அவருக்கு இதுதான் முதல் போட்டி. இன்றைய மேட்சை டாஸ் வென்ற தென்னாபிரிக்க அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணி தொடக்கத்தில் இருந்தே திணறி வந்தது. வெறும் 5 ரன்கள் எடுத்து இருந்த டி காக் சிராஜ் ஓவரில் அவுட் ஆனார்.
தவான்
இதன்பின்னர் 10வது ஓவரை ஷாபாஸ் அகமது வீசினார். அந்த ஓவரின் 5வது பந்தில் ஜெனேன் மாலன் பேட்டிங் செய்து கொண்டு இருந்தார். அப்போது ஷாபாஸ் வீசிய பந்து மாலன் காலில் பட்டது போல தெரிந்தது. இதையடுத்து ஷாபாஸ் உடனே எல்பிடபிள்யூ விக்கெட் கேட்டார். ஆனால் அம்பயர் கொடுக்கவில்லை. ஷாபாஸ் மீண்டும் மீண்டும் விக்கெட்டா என்று கேட்டார். ஆனால் நடுவர் கொடுக்கவில்லை.
ரிவ்யூ
இதையடுத்து ரிவ்யூ எடுக்கலாமா என்று ஷாபாஸ் கேப்டன் தவானை பார்த்தார். தவான் என்ன செய்வது என்று தெரியாமல் குழப்பத்தில் இருந்தார். ஆனால் சஞ்சு சாம்சன் உறுதியாக அது விக்கெட்தான் என்றார். இது விக்கெட்தான். ரிவ்யூ கேளுங்கள்.. எடுங்க.. எடுங்க என்று உறுதியாக சொன்னார். அவரை நம்பி தவானும் ரிவ்யூ கேட்டார்.
முதல் சர்வதேச விக்கெட்
பந்து பேட்டில் பட்டது போல இருந்ததால் தவான் சந்தேகத்துடன் ரிவியூவிற்கு கையை தூக்கினார். இதன்பின் ரிவ்யூவில்தான் அல்ட்ரா எட்ஜ் ஆகவில்லை என்று தெரிந்தது. அதோடு பந்து சரியாக மிடில் ஸ்டம்பில் பட்டதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து நாட் அவுட் முடிவை மாற்றும்படி ரிவ்யூவில் கூறப்பட்டது. இதையடுத்து மாலன் 25 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அவுட் ஆனார். இந்த விக்கெட் ஷாபாஸ் அகமதுவிற்கு முதல் சர்வதேச விக்கெட் ஆகும்.