நீதிபதியின் உத்தரவையும் மீறி... சசிகலா போல் ராம்ரஹீமுக்கும் "ஜாம் ஜாம்" சலுகைகள்!
பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட தேரா சச்சா அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரஹீம் சிறையில் சிறப்பு சலுகைகளை பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ரோத்தக் : பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டு சுனாரியா சிறையில் அடைக்கப்பட்டுள்ள ராம் ரஹீமுக்கு எந்த வித சலுகைகளும் கொடுக்கக் கூடாது என்று நீதிபதி உத்தரவிட்டும் அவர் அச்சலுகைகளை அனுபவித்து வருகிறார் என்று ஜாமீனில் வந்த கைதி ஒருவர் தெரிவித்துள்ளார்.
கடந்த 1998-ஆம் ஆண்டு ஹரியாணாவில் சிர்சா நகரத்தில் தேரா சச்சா அமைப்பு சார்பில் ஆசிரமங்களை ஏற்படுத்தினார் ராம் ரஹீம். அவரது நவீனமயமான தோற்றத்தால் மக்களை கவர்ந்தார்.
ஆசிரமத்துக்கு வந்த இரு பெண் பக்தைகளை கடந்த 2002-ஆம் ஆண்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இது தொடர்பான புகாரின் பேரில் அவர் கடந்த ஆகஸ்ட் மாதம் கைது செய்யப்பட்டு சுனாரியா சிறையில் அடைக்கப்பட்டார்.
சிறப்பு சிபிஐ நீதிபதி அதிரடி
பாதுகாப்பு கருதியும், வன்முறையை தடுக்கவும் பாலியல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ராம் ரஹீமுக்கு சுனாரியா சிறைக்கு சென்று பஞ்ச்குலா சிறப்பு சிபிஐ நீதிபதி ஜெகதீஷ் சிங் தீர்ப்பளித்தார். அதில் அவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அப்போதே அவர் மற்ற கைதிகளை போல் நடத்த வேண்டும் என்றும் எந்த காரணத்தைக் கொண்டும் அவருக்கு சலுகைகள் காட்டக் கூடாது என்று நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.
கைதி தகவல்
இந்நிலையில் சுனாரியா சிறையிலிருந்து ஜாமீனில் வெளியே வந்துள்ள ராகுல் ஜெயின் என்ற கைதி, சிறையில் ராம் ரஹீமுக்கு சிறப்பு சலுகைகள் வழங்கப்படுவதாக குற்றம்சாட்டினார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், ராம் ரஹீம் சிறப்பு சலுகைகள் பெற்று வருவதால் மற்றவர்கள் நடமாட அனுமதி மறுக்கப்படுகிறது.
பார்வையாளர்களுடன் ஆலோசனை
மற்ற கைதிகளை சந்திக்க வரும் பார்வையாளர்களுக்கு 20 நிமிடங்கள்தான் நேரம் வழங்கப்படும். ஆனால் ராம் ரஹீமோ 2 மணி நேரம் பார்வையாளர்களை சந்திக்கிறார். சிறையில் கைதிகளுக்கு தூய்மைப்படுத்துவது உள்ளிட்ட பணிகள் வழங்கப்படும். ஆனால் ராம் ரஹீமுக்கு அத்தகைய பணிகள் ஏதும் வழங்கப்படவில்லை.
யாரும் பார்த்ததில்லை
ராம் ரஹீமை இதுவரை எந்த கைதிகளும் நேரில் பார்த்ததில்லையாம். அவர் இருக்கும் சிறை பக்கம் கூட மற்ற கைதிகள் செல்ல அனுமதி கிடையாது. அந்த அளவுக்கு அவருக்கு விஐபி சலுகை வழங்கப்படுகிறது. சிறப்பு வாகனத்தின் மூலம் சாமியாருக்கு உணவு வரவழைக்கப்படுகிறது என்றார்.
விஐவி சலுகைகள் இல்லை
இந்த கைதியின் குற்றச்சாட்டை அமைச்சர் கிருஷ்ணன் லால் பன்வார் மறுத்துள்ளார். அப்போது அவர் கூறுகையில், ராம் ரஹீமுக்கு எந்தவித விஐபி சலுகையும் வழங்கப்படுவதில்லை. அவர் மற்ற கைதிகளை போல் நடத்தப்படுகிறார். ராம் ரஹீம் உள்ள அறைக்கும், மற்ற கைதிகள் உள்ள அறைக்கும் நீண்ட தூரம் உள்ளது. எனவே அவருடன் அவர்கள் பேசகூட முடியாது. அதனால் வாய்க்கு வந்ததை பேசுகின்றனர் என்றார் அமைச்சர்.