கார்ட்டூன் போட்டால் ஜெயில்.. பலாத்கார பேச்சாளருக்கு எம்.பி. பதவி.. இது மமதா ராஜ்ஜியம்!
கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் முதல்வர் மமதா பானர்ஜியை விமர்சித்து கார்ட்டூன் படம் போட்டதால் ஒரு பேராசிரியரை சிறையில் தள்ளியது மமதா அரசு முன்பு. ஆனால் சிபிஎம் கட்சிப் பெண்களையெல்லாம் பாலியல் பலாத்காரம் செய்யுங்கள் என்று பேசிய அக்கட்சியின் எம்.பி. மீது இதுவரை சட்டத்தின் நிழல் கூட விழவில்லை.
மேற்கு வங்க மாநில அரசின் இந்த பாரபட்சமான போக்கு குறித்து பேஸ்புக்கிலும், டிவிட்டரிலும் பலரும் சாடி கருத்து தெரிவித்து வருகின்றனர்.
மேற்கு வங்க திரினமூல் காங்கிரஸ் எம்.பி. தபஸ் பால் பேசிய திமிர்ப் பேச்சு பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் முன்பு கார்ட்டூனிஸ்ட் ஒருவருக்கு எதிராக கொந்தளித்த முதல்வர் மமதா தற்போது தபஸ் பால் விவகாரத்தில் வாய் மூடி இருப்பது ஏன் என்று பலரும் சாடி வருகின்றனர்.
ஜாதவ்பூர் பேராசிரியர்
ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த வேதியியல் பேராசிரியர் அபிஷேக் மொஹபத்ராவும், அவரது பக்கத்து வீட்டுக்காரரும், முதல்வர் மமதா பானர்ஜி, அப்போதைய ரயில்வே அமைச்சர் முகுல் ராய், முன்னாள் ரயில்வே அமைச்சர் திணேஷ் திரிவேதி ஆகியோரை விமர்சித்து கார்ட்டூன் போட்டிருந்தனர்.
உடனே கைது
இதனால் கொதிப்படைந்த மமதா, உடனடியாக இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்து கைது செய்யவும் உத்தரவிட்டார். இருவரும் உடனடியாக கைதும் செய்யப்பட்டனர்.
மரியாதைக்குரியவர்கள் மீது
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறுகையில் மரியாதைக்குரிய மனிதர்கள் மீது அவதூறு கற்பிக்கும் வகையிலான செயல் இது என்று வர்ணித்திருந்தனர்.
அப்படீன்னா தபஸ் பால் பேசியது?
சாதாரண கார்ட்டூன் போட்டதற்கே கைது செய்த மேற்கு வங்க அரசு தற்போது தனது கட்சி எம்.பியான தபஸ் பால் பேசிய கொடூரமான, வக்கிரமான, அசிங்கமான கருத்துக்காக இதுவரை வாய் திறக்காமல் இருப்பது ஏன் என்பதுதான் புரியவில்லை.
பெண்கள் மரியாதைக்குரியவர்கள் இல்லையோ…!?!
ஒருவேளை மமதா பானர்ஜி போன்றவர்கள்தான் மரியாதைக்குரியவர்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பெண்கள் எல்லாம் மரியாதை இல்லாதவர்கள் என்று மேற்கு வங்க அரசும், அந்த மாநில போலீஸாரும் கருதுகிறார்களோ என்னவோ என்று தெரியவில்லை.
கடும் பேச்சு
தபஸ் பால் பேசியது மிகக் கடுமையான குற்றப் பேச்சு.. இதற்காக கடும் பிரிவில் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும். ஆனால் இதுவரை தபஸ் பால் மீது சட்டத்தின் நிழல் கூட படியவில்லை. இந்த லட்சணத்தில் பேச்சுக்கு விளக்கம் கேட்டு 48 மணி நேர அவகாசத்தை வேறு திரினமூல் காங்கிரஸ் கொடுத்துள்ளது.
மமதாதான் விளக்கம் தர வேண்டும்
ஏற்கனவே மேற்கு வங்கத்தில் பாலியல் பலாத்காரங்கள் அதிகம் உள்ளன. இந்த நிலையில் ஆளுங்கட்சி எம்.பியே போய்ப் பலாத்காரம் செய்யுங்கள் என்று பேசுகிறார்... தபஸ் விளக்கம் தருவது இருக்கட்டும், முதலில் இதற்கு மமதாதான் விளக்கம் தர வேண்டும்!