50 கிலோ வெடிமருந்து-'உள்ளே' அழைத்து பயங்கர தாக்குதல்- சத்தீஸ்கர் மாவோயிஸ்டுகள் போட்ட ஸ்கெட்ச்!
ராய்ப்பூர்: சத்தீஸ்கரில் துணை ராணுவத்தினரை திட்டமிட்டு உள்ளே அழைத்து 50 கிலோ வெடிமருந்தை பயன்படுத்தி பயங்கர தாக்குதலை நடத்தி இருக்கின்றனர் மாவோயிஸ்டுகள். இந்த கோழைத்தனமான தாக்குதலில் 11 துணை ராணுவத்தினர் வீரமரணம் அடைந்தனர்.
மாவோயிஸ்டுகள் இன்னமும் உயிர்ப்புடன் இருக்கும் மாநிலங்களில் ஒன்று சத்தீஸ்கர். இம்மாநிலத்தில் மாவோயிஸ்டுகள் தாக்குதலில் நமது பாதுகாப்பு படையினர் படுகொலை செய்யப்படுவது தொடர்ந்து கொண்டே இருக்கிறது. மாவோயிஸ்டுகள் இதுவரை நடத்திய தாக்குதலில் மிக கொடூரமானது 76 பாதுகாப்பு படையினரை பலி கொண்ட 2010-ம் ஆண்டு தாக்குதல்தான்.

இதன்பின் 4 ஆண்டுகள் கழித்து 2014-ம் ஆண்டு சுக்மாவில் 15 பாதுகாப்பு படையினர், மாவோயிஸ்டுகள் தாக்குதலில் உயிரிழந்தனர். 2017-ம் ஆண்டு அதே சுக்மாவில் மற்றொரு தாக்குதலில் மேலும் 12 துணை ராணுவப் படையினர் மாவோயிஸ்டுகள் தாக்குதலில் கொல்லப்பட்டனர். சுக்மாவில் துணை ராணுவப் படைக்கும் மாவோயிஸ்டுகளுக்கும் 2017-ல் நடந்த மோதலில் 24 பாதுகாப்பு படையினர் கொல்லப்பட்டனர். 2018-ல் சுக்மாவில் மற்றொரு தாக்குதலை மாவோயிஸ்டுகள் நடத்தினர். இதில் 9 பாதுகாப்பு படையினர் உயிரிழந்தனர். கடந்த 2021-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் சுக்மாவின் பிஜப்பூர் பகுதியில் மாவோயிஸ்டுகள் நடத்திய தாக்குதலில் 22 பாதுகாப்பு படையினர் கொல்லப்பட்டனர்.
இதனிடையே பாதுகாப்பு படை தரப்பில் மாவோயிஸ்டுகளே சத்தீஸ்கரில் இல்லை; ஆண்டுதோறும் சுமார் 400 மாவோயிஸ்டுகள் சரணடைந்துவருவதாக பெருமிதத்துடன் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இந்த பெருமிதத்தை மாவோயிஸ்டுகள் நிலைக்கவிடவில்லை. பஸ்தார் பிராந்தியத்தில் தண்டேவடா வனப்பகுதியில் அரண்பூர், சமேலி கிராமங்களில் மாவோயிஸ்டுகளின் மூத்த தலைவர்கள் ஒன்று கூடுகின்றனர் என பாதுகாப்பு தரப்புக்கு உளவுத்தகவல் ஒன்று கிடைத்தது. இதனையடுத்து துணை ராணுவப் படையினர் அப்பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டு தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இத்தேடுதல் நடவடிக்கை முடிவடைந்த பின்னர் பாதுகாப்பு படையினர் திரும்பி கொண்டிருந்த போது அவர்களது வாகனத்தை இலக்கு வைத்து நிலத்தில் புதைக்கப்பட்டிருந்த கண்ணிவெடிகளை வெடிக்க செய்தனர் மாவோயிஸ்டுகள். இதில் மொத்தம் 11 துணை ராணுவப் படையினர் பலியாகினர்.
இது தொடர்பாக பாதுகாப்பு படை வட்டாரங்கள் கூறுகையில், மாவோயிஸ்டுகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டே பொய்யான உளவுத் தகவலை அனுப்பி வைத்தனர். இதனால் அப்பகுதியில் தேடுதல் வேட்டைக்கு பாதுகாப்பு படையினர் அனுப்பி வைக்கப்பட்டனர். ஆனால் வனப்பகுதியில் மறைந்திருந்த மாவோயிஸ்டுகள், பாதுகாப்பு படையினர் திரும்பிச் செல்லும் வரை காத்திருந்தனர. பின்னர் மாவோயிஸ்டுகள் 50 கிலோ வெடிருந்தை பயன்படுத்தி தாக்குதல் நடத்தி இருக்கின்றனர். இதில் 11 துணை ராணுவப் படையினர் உயிரிழந்துள்ளனர் என்கின்றன.












Click it and Unblock the Notifications