இப்படித்தான் தோற்றார் ஷீலா தீட்சித்...!
டெல்லி: புது டெல்லி தொகுதியில் கடந்த 3 முறையும் அழகாக வென்ற ஷீலா தீட்சித் இந்த முறை தோல்வியுற்ற கதை பெரும் சோகக் கதைதான். காரணம், இத்தொகுதியில் பெரும்பாலான வாக்காளர்கள், காங்கிரஸுக்கு ஓட்டுப் போட்டுப் பழக்கப்பட்டவர்கள். அப்பட்டிப்பட்டவர்கள் அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு மாற்றிப் போட்டதுதான் காங்கிரஸை அதிர வைத்துள்ளது.
ஆனால் ஷீலா தீட்சித்துக்குப் போடாமல், கேஜ்ரிவால் பக்கம் இந்த வாக்காளர்கள் சாய்ந்ததில் பெரிய ஆச்சரியம் இல்லை என்கிறார்கள் இந்த வாக்காளர்கள்.
காரணம், காலம் காலமாக அடிப்படைக் கோரிக்கைகளுக்காக குரல் கொடுத்து ஓய்ந்து போனதன் கோபம்தான் தங்களை மாற்றிப் போட வைத்து விட்டதாக இவர்கள் சொல்கிறார்கள்.

தீட்சித் வீட்டுக்கு அருகில் பெரிய குடிசைப் பகுதி
ஷீலா தீட்சித்தின் வீட்டிலிருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் துக்ளக் லேன் பகுதியில் பெரிய குடிசைப் பகுதி உள்ளது.

குறுகிய வீடுகள்.. அடிப்படை வசதி இல்லை
இங்கு அத்தனை வீடுகளுமே சின்னச் சின்ன குடிசைகள்தான். அடிப்படை வசதி சுத்தமாக கிடையாது. கழிப்பறை கூட கிடையாது.

சுற்றிலும் விவிஐபிகள்
ஆனால் இந்த குடிசைப் பகுதியைச் சுற்றிலும் பெரிய பெரிய விஐபிகள் வசித்து வருகிறார்கள். மத்தி அமைச்சர் கிருஷ்ணா தீரத், சமாஜ்வாடி தலைவர் நரேஷ் அகர்வால்.. கொஞ்சம் தள்ளிப் போனால் ராகுல் காந்தி குடியிருக்கிறார்.

500 குடும்பங்கள்
இங்கு கிட்டத்தட்ட 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. அனைவரும் தலித் மக்கள் மற்றும் முஸ்லீம்களதான்.

சலிச்சுப் போச்சுங்க
இவர்களிடம் போய்க் கேட்டால், எங்களுக்கு கழிப்பறை வசதி கேட்டு கேட்டு சலித்துப் போய் விட்டோம். ஷீலாவும் கண்டுகொள்ளவில்லை, நாங்கள் ஓட்டுப் போட்டு வந்த காங்கிரஸும் கண்டு கொள்ளவில்லை. பிறகு எப்படி நாங்கள் இந்த முறையும் அவர்களுக்கே ஓட்டுப் போடுவது என்று கேட்கிறார்கள்.

குறைந்த வருவாய் பிரிவினர்
இவர்கள் தவிர குறைந்த வருவாய் பிரிவினரும் பெருமளவில் இத்தொகுதியில் வசிக்கின்றனர். இவர்களும் காலம் காலமாக காங்கிரஸை ஆதரித்தவர்கள்தான். ஆனால் இவர்கள் மாறவும் காங்கிரஸே காரணம் என்கிறார்கள்.

கேஜ்ரிவால் பக்கம் சாயக் காரணம்
இவர்களில் பெரும்பாலானோர் இந்த முறை கேஜ்ரிவாலை தேர்ந்தெடுத்து விட்டனர். காரணம், ஷீலா மீதான தொடர் அதிருப்தியே.

25,000 வாக்கு வித்தியாசத்தில்
கடந்த 1998 முதல் வென்று வந்த புதுடெல்லி தொகுதியில் இந்த முறை ஷீலா தீட்சித் 25,000க்கும் மேற்பட்ட வாக்கு வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியுள்ளார்.

குடிசைப் பகுதிக்கு போனதே இல்லை ஷீலா
தனது வீட்டுக்கு வெகு அருகில் இருந்தும் கூட இந்த குடிசைப் பகுதிகளுக்கு கடந்த 10 வருடமாக ஒரு முறை கூட ஷீலா போனதே இல்லையாம். ஆனால் இங்கு அடிக்கடி கேஜ்ரிவாலைப் பார்க்க முடியுமாம்.

ஷீலாவின் பூத் ஏஜென்ட்டே மாற்றிப்போட்ட விந்தை
புதுடெலல்லி தொகுதியில் ஷீலாவின் பூத் ஏஜென்ட்டாக இருந்தவர் மகாவீர் சிங். இவரே ஆம் ஆத்மிக்குத்தான் ஓட்டுப் போட்டாராம்.. இதெப்படி இருக்கு பாருங்க...

எப்பப் போனாலும் மரியாதை இல்லை
ஏன் இப்படி செய்தீர்கள் சிங் என்று கேட்டால், பிறகென்னங்க, ஏதாவது கோரிக்கையுடன் ஷீலாதீட்சித் வீட்டுக்குப் போனால் பிறகு பார்க்கலாம் என்றுதான் பதில் வரும். பல நேரங்களில் அவரைப் பார்க்கவே முடியாது. பிறகுஎப்படிஅவருக்கு ஓட்டுப் போடுவது என்று அதிரடியாக கேட்கிறார்.

காமன்வெல்த்துக்காக குடிசைகளை அகற்ற முயற்சி
காமன்வெல்த் போட்டியின்போது இந்த குடிசைப் பகுதியை அகற்றமுயன்றதாம் மாநகராட்சி. அதுவும் இந்த மக்கள் ஷீலா அரசு மீது கோபத்துடன் இருக்க முக்கியக் காரணம் என்கிறார்கள்.

குடிசைவாசிகள் ஒட்டுமொத்தமாக கைவிட்டனர்
இதேபோல டெல்லி முழுவதும் உள்ள பல்வேறு குடிசைப் பகுதிகளிலும் ஷீலா மீதும், காங்கிரஸ் மீதும் குடிசைவாசிகள் கடும் அதிருப்தியுடன் உள்ளனர். அத்தனை பேரும் கேஜ்ரிவால் கட்சியை ஆதரித்துள்ளனர். இந்த குடிசைப் பகுதிகளில்தான் அதிக வாக்குப்பதிவு நடந்ததுஎன்பதும் இங்கு கவனிப்புக்குரியது.
இப்படித்தான் ஷீலாவும், அவரது கட்சியும் டெல்லிசட்டசபைத் தேர்தலில் தோற்றார்களாம்.












Click it and Unblock the Notifications