வெறும் 10 நாட்களுக்கு முன் உருவான நிறுவனம்.. ரபேல் டீலில் ரிலையன்ஸ் டிஃபன்ஸ் வந்தது எப்படி?!
ரபேல் ஒப்பந்தத்திற்காக ரிலையன்ஸ் டிஃபன்ஸ் நிறுவனம் திடீர் என்று உருவாக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது.
Recommended Video
டெல்லி: ரபேல் ஒப்பந்தத்திற்காக ரிலையன்ஸ் டிஃபன்ஸ் நிறுவனம் திடீர் என்று உருவாக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது.
ரபேல் ஒப்பந்தத்தை ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு அளிக்கும்படி பிரதமர் மோடி கேட்டுக் கொண்டார் என்று பிரான்சின் முன்னாள் அதிபர் ஹாலண்டே தெரிவித்து இருக்கிறார். அவரின் இந்த குற்றச்சாட்டு உலகம் முழுக்க வைரலாகி உள்ளது.
இந்த ரபேல் ஊழல் பாஜக மேல் தொங்கும் கத்தியாக உருவெடுத்துள்ளது. இதை எப்படி சமாளிப்பது என்று தெரியாமல் அந்த கட்சியினர் திணறி வருகிறார்கள்.
ரிலையன்ஸ் சேர்ந்தது
பிரதமர் மோடி 2015 ஏப்ரல் மாதம் இரண்டாம் வாரத்தில்தான் பிரான்ஸ் சென்றார். அப்போதுதான் பிரான்ஸின் அப்போதைய அதிபர் ஹாலண்டேவுடன் ரபேல் ஒப்பந்தம் செய்யப்பட்டது. பிரான்ஸ் ஆவணங்களில் அடிப்படையில், அந்த சந்திப்பில் ரிலையன்ஸ் நிறுவனத்தின் அனில் அம்பானியும் கலந்து கொண்டு இருக்கிறார். இந்த சந்திப்பிற்கு பின் ரிலையன்ஸ் நிறுவனம் இந்த ஒப்பந்தத்தில் சேர்த்துக் கொள்ளப்படுகிறது.
திடீர் என்று உருவாக்கப்பட்டது
இந்த ஒப்பந்தம் ரிலையன்ஸ் டிஃபன்ஸ் என்று பதிவு செய்யப்பட்ட ரிலையன்ஸ் குழும நிறுவனத்திற்கு அளிக்கப்பட்டு இருக்கிறது. இந்த நிறுவனம் தொடங்கப்பட்டது 2015ல் தான். இதில் ஆச்சர்யமான விஷயம் என்னவென்றால் ரபேல் ஒப்பந்தத்திற்கு பத்து நாட்களுக்கு முன்புதான் மார்ச் 23, 2015ல் இந்த நிறுவனம் திறக்கப்பட்டு இருக்கிறது. அதாவது பிரதமர் மோடியுடன் அனில் அம்பானி சென்று ஒப்பந்தம் செய்வதற்கு 10 நாட்களுக்கு முன் இந்த நிறுவனம் வானத்தில் இருந்து புதிதாக குதித்து இருக்கிறது.
எவ்வளவு ரூபாய்
மிக முக்கியமான விஷயம் என்னவென்றால் இதற்காக அப்போது வெறும் 5 லட்சம் மட்டுமே முதலீடு செய்யப்பட்டது. அதாவது அவசர அவசரமாக வெறும் 5 லட்சம் முதலீட்டில் ஒரு நிறுவனம் வேகமாக உருவாக்கப்பட்டு இருக்கிறது. பின் அந்த நிறுவனம் ரபேல் ஒப்பந்த பேச்சுவார்த்தையில் இடம் பெற்றுள்ளது.
ஒப்பந்தத்தை கொடுத்து இருக்கிறார்கள்
இதில் சோகமான விஷயம் கடைசியில் இந்த புதிய கத்துக்குட்டி நிறுவனத்திற்குத்தான் ரபேல் ஒப்பந்தம் கிடைக்கிறது. அதாவது ரபேல் விமானங்களை பராமரிப்பது, உதிரி பாகங்களை வைத்து புதிய விமானம் உருவாக்குவது, ரபேல் தொழில்நுட்பத்தை பெறுவது ஆகியவை இந்த 10 நாள் வயது நிரம்பிய ரிலையன்ஸ் டிஃபன்ஸ் நிறுவனத்திற்கு அளிக்கப்பட்டுள்ளது.
எப்படி முடியும்
ஆனால் இந்த துறையில் பழம் தின்று கொட்டை போட்ட டிஆர்டிஓ மற்றும் ஹிந்துஸ்தான் ஏரோனாட்டிகள் நிறுவனம் ஆகிய பொதுத்துறை நிறுவனங்களுக்கு இந்த ஒப்பந்தம் அளிக்கப்படவில்லை. பேச்சுவார்த்தைக்கு கூட இதிலிருந்து அதிகாரிகள் அழைத்து செல்லப்படவில்லை. வெறும் 10 நாள் மட்டுமே ஆன நிறுவனத்திற்கு இவ்வளவு பெரிய பாதுகாப்பு சம்பந்தப்பட்ட ஒப்பந்தத்தை மத்திய அரசு அளிக்க சொல்லி இருப்பது ஏன் என்று கேள்விக்குத்தான் இன்னும் பதில் கிடைக்காமல் இருக்கிறது.