கருப்பை வெள்ளையாக்க பண முதலைகள் பயன்படுத்தும் யுக்திகள் இவைதான்! சில பளிச் உண்மைகள்
டெல்லி: புழக்கத்திலிருந்த ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பல வழிகளில் பணம் வெள்ளையாக மாற்றப்படுகிறது.
கருப்பு பணம் பெருமளவில் ரூ.500, 1000 நோட்டுக்களாகவே உள்ளதால் அவற்றை மத்திய அரசு தடை செய்தது. புதிய ரூபாய் நோட்டுக்களைத்தான் பயன்படுத்த வேண்டும் என பிரதமர் மோடி கூறியிருந்தார்.
எனவே பழைய ரூபாய் நோட்டுக்களை தக்க வருவாய் ஆதாரங்களுடன் டெபாசிட் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. இப்படி செய்ய முடியாத கருப்பு பண பதுக்கல்காரர்கள் அதை வேறு வகையில், வெள்ளையாக்க முயற்சி செய்கிறார்கள்.
அதில் முதலிடம் பிடிப்பது பண லாண்டரிங் நடைமுறையாகும்.

மணி லாண்டரிங்
மணி லாண்டரிங் நடைமுறைப்படி, பணத்தின் உரிமையாளர் அந்த பணத்தை வேறு நபர்கள் மூலம், பல்வேறு வங்கிகளில் டெபாசிட் செய்து அவர்களிடமிருந்து பணத்தை பெற்றுக்கொள்வார். வங்கியில் அதிகம் ரொக்கம் இருப்பு இல்லாத நபர்களின் வங்கி கணக்கில் டெபாசிட் செய்யப்பட்டு இந்த பணம் திரும்பி வருவது வழக்கம். சட்டப்படியான வருவாயாக காட்டிக்கொள்ள போலி நிறுவனங்கள் மூலம் லாபம் கிடைத்ததாக காட்டுவதும் உண்டு.

ஆபரணம்
கருப்பு பண முதலைகளை பணமாக சேமித்து வைக்காமல் வைரம் அல்லது தங்கமாகவும் பதுக்கி வைத்துள்ளனர். இவர்களின் முதல் சாய்ஸ் வைரம்தான். ஏனெனில் அதை சேமித்து வைக்க அதிக இடம் தேவைப்படாது.

ஹவாலா
இதேபோல ஹவாலா முறையிலும் பணம் வெள்ளையாக்கப்படுகிறது. மொரீசியஸ் நாட்டில் கம்பெனி இருப்பதாக பொய் கணக்கு காட்டி ஹவாலா முறையில் பணத்தை பெறும் கருப்பு பண முதலைகள் நமது நாட்டில் அதிகம்.

பினாமி சொத்து
நம்பிக்கையான வேறு நபர்கள் பெயர்களில் சொத்துக்களை வாங்கிப்போடுவது பினாமி நடைமுறையாகும். ஒருவரே அதிகம் சொத்துக்களை வாங்கினால் கணக்கு காட்ட வேண்டிவரும் என்பதால் இப்படி பினாமி பெயர்களில் சொத்துக்கள் சேர்க்கப்படுகின்றன.

தப்பிக்கும் வணிகர்கள்
நமது நாட்டின் வர்த்தகம் பெரும்பாலும் பணத்தின் மூலமே நடக்கிறது. இதனால், வணிகம் செய்வோர் பெருமளவுக்கு வரி கட்டாமல் தப்பிவிடுகிறார்கள். மாத ஊதியம் பெறுவோர்தான் கண்டிப்பாக வரி கட்டும் நிலையில் உள்ளனர். வணிகர்களும் வரி கட்ட ஆரம்பித்தால் மாத சம்பளக்காரர்கள் மீதான அழுத்தம் குறைய வாய்ப்பு ஏற்படலாம்.

பணம் படுத்தும் பாடு
இந்திய பொருளாதாரத்தில் பணத்தின் பங்களிப்பு ரூ.17,54,000 கோடியாக உள்ளது. இதில் 50 ரூபாய் நோட்டுக்கள் 45 சதவீத மதிப்பு கொண்டுள்ளன. 1000 ரூபாய் நோட்டுக்களின் பங்களிப்பு 39 சதவீதம். பிற நோட்டுக்களின் பங்களிப்பு 16 சதவீதம். கணக்கில் வராமலே புழங்கும் பணம் இதில் 80 சதவீதமாகும். வங்கி வழியாக வர்த்தகம் நடைபெற்றால் கணக்கில் காட்டாமல் தப்பிக்க முடியாது.












Click it and Unblock the Notifications