சரியான நேரத்தில் குரைத்த நாய்.. நள்ளிரவில் உயிர் தப்பிய 65 பேர்! அடுத்த நிமிடம் கிராமமே தரைமட்டமானது
ஷிம்லா: இந்தப் பருவமழை சீசனில் இமாச்சலப் பிரதேசத்தில் பல்வேறு இடங்களிலும் மோசமான பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. இதனால் கனமழை கொட்டி வரும் நிலையில், பல இடங்களில் நிலச்சரிவு உள்ளிட்ட மோசமான சம்பவங்கள் நடந்து வருகிறது. அப்படித் தான் அங்குள்ள மாண்டி என்ற ஊரில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. சரியான நேரத்தில் அங்கிருந்த நாய் ஒன்று குரைத்து மக்களை அலர்ட் செய்த நிலையில், 67 பேர் உயிர் தப்பியுள்ளனர்.
இமாச்சலப் பிரதேசத்தில் மேக வெடிப்பு காரணமாகக் கனமழை கொட்டி வருகிறது. இந்தக் கனமழையின் காரணமாக நிலச்சரிவுகள், திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளன. குறிப்பாகக் கனமழையால் அங்குப் பல இடங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டு வருகிறது. இதனால் இமாச்சலப் பிரதேசத்தில் மோசமான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது.

67 பேர் உயிர் தப்பினர்
அப்படித் தான் மண்டி மாவட்டத்தில் உள்ள அங்குச் சமீபத்தில் நிலச்சரிவு ஏற்பட்டது. இருப்பினும், நாய் ஒன்று சரியான நேரத்தில் குரைத்து அபாயத்தை உணர்த்தியதால், 20 குடும்பங்களைச் சேர்ந்த 67 பேர் சரியான நேரத்தில் உயிர் தப்பினர். ஜூன் 30-ம் தேதி நள்ளிரவு 12 மணி முதல் 1 மணிக்குள் மண்டி பகுதியில் உள்ள சியாத்தி கிராமம் நிலச்சரிவால் தரைமட்டமானது.
சரியான நேரத்தில் குரைத்த நாய்
இது குறித்து சியாத்தி கிராமத்தைச் சேர்ந்த நரேந்திரா கூறுகையில், "இரவு மழை பெய்து கொண்டிருந்தபோது, எனது வீட்டின் இரண்டாவது மாடியில் தூங்கிக் கொண்டிருந்த நாய் திடீரெனச் சத்தமாகக் குரைக்க ஆரம்பித்தது. நான் குரைக்கும் சத்தம் கேட்டு எழுந்தேன். நாயிடம் சென்றபோது, வீட்டின் சுவரில் பெரிய விரிசல் விழுந்திருப்பதையும், தண்ணீர் உள்ளே வருவதையும் பார்த்தேன். உடனே நான் நாயுடன் கீழே ஓடிவந்து எல்லாரையும் எழுப்பினேன்" என்றார்.
நரேந்திரா கிராமத்தில் இருந்த மற்றவர்களையும் எழுப்பிப் பாதுகாப்பாகக் கிளம்பச் சொல்லி இருக்கிறார். கனமழை தொடர்ந்து கொட்டியதால் மக்கள் எல்லாவற்றையும் விட்டுவிட்டு அங்கிருந்து வெளியேறினர்.. அவர்கள் கிளம்பிய கொஞ்ச நேரத்திலேயே கிராமத்தை நிலச்சரிவு தாக்கியது. இதில் சுமார் 10+ வீடுகள் தரைமட்டமாகின. இப்போது அங்கு வெறும் 4,5 வீடுகள் மட்டுமே மீதம் இருக்கிறது. மற்றவை நிலச்சரிவால் சீர்குலைந்துவிட்டன..
இமாச்சல் அரசு உதவி
உயிர் பிழைத்தவர்கள் கடந்த ஏழு நாட்களாக திரியம்பாலா கிராமத்தில் உள்ள நைனா தேவி கோவிலில் தஞ்சம் புகுந்துள்ளனர். இதன் காரணமாகக் கிராம மக்கள் பலரும் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட கிராம மக்களுக்கு மற்ற கிராமங்களைச் சேர்ந்த மக்கள் உதவி செய்தனர். பாதிக்கப்பட்டோருக்கு அரசு சார்பில் ரூ.10,000 உதவித் தொகையாக வழங்கப்படுகிறது.
தொடரும் மரணங்கள்
ஜூன் 20ஆம் தேதி பருவமழை தொடங்கியதில் இருந்து இமாச்சலப் பிரதேசத்தில் குறைந்தது 78 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் நிலச்சரிவு, திடீர் வெள்ளப்பெருக்கு தொடர்பான சம்பவங்களில் மட்டும் 50 பேர் உயிரிழந்தனர். சாலை விபத்துகளில் 28 பேர் இறந்ததாக மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது. கனமழையின் காரணமாக மாநிலத்தில் 23 இடங்களில் திடீர் வெள்ளப்பெருக்குகளும், 19 இடங்களில் மேக வெடிப்புச் சம்பவங்களும், 16 இடங்களில் நிலச்சரிவுகளும் ஏற்பட்டுள்ளன.
மேக வெடிப்புகள், திடீர் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவுகளால் மண்டி மாவட்டம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், அதிக எண்ணிக்கையிலான இறப்புகள் பதிவாகியுள்ளன. திடீர் வெள்ளப்பெருக்கினால் மண்டியில் 156 சாலைகள் உட்பட மாநிலம் முழுக்க 280 சாலைகள் பாதிக்கப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications