ஒடிசாவில் சமலேஷ்வரி எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்து... 3 பேர் உயிரிழப்பு
புவனேஷ்வர்: ஒடிசா மாநிலத்தில் ரயில் கவிழ்ந்த விபத்தில் ஊழியர்கள் மூன்று பேர் உயிரிழந்தனர்.
மேற்கு வங்க மாநிலம் ஹவுராவில் இருந்து ஒடிசா மாநிலம் ஜகதால்பூருக்கு செல்லும் சமலேஷ்வரி எக்ஸ்பிரஸ் ரயில் கெவுட்குடா என்ற இடத்தின் அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக ரயில் என்ஜின் தடம் புரண்டு கவிழ்ந்து, தீப்பற்றி எரிந்தது.
என்ஜின் பெட்டியை அடுத்து இருந்த சரக்கு பெட்டி, மற்றும் இரண்டாம் வகுப்பு பயணிகள் பெட்டிகளும் தடம் புரண்டு கவிழ்ந்தன. இந்த விபத்தில் ரயில்வே ஊழியர்கள் மூன்று பேர் உயிரிழந்தனர். இதையடுத்து உடனடியாக மீட்பு பணிகள் தொடங்கின.
விபத்தை தொடர்ந்து, அருகில் உள்ள சிங்காபூர்ரோடு மற்றும் கெவுட்குடா ரயில் நிலைய அதிகாரிகளை பணி இடைநீக்கம் செய்து ரயில்வே துறை உத்தரவிட்டுள்ளது. விபத்து குறித்த விரிவான விசாரணைக்கும் ரயில்வே துறை ஆணையிட்டுள்ளது.
இந்த விபத்து குறித்து கிழக்கு கடற்கரை ரயில்வே செய்தித் தொடர்பாளர் ஜே.பி. மிஸ்ரா கூறியதாவது, உயிரிழந்தவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். சாகர் (மூத்த பொறியாளர்) எலக்ட்ரிக்கல், கௌரி நாயுடு (மின் தொழில்நுட்ப வல்லுநர்) மற்றும் சுரேஷ் (பராமரிப்பு கோபுரத்தின் தொழில்நுட்ப வல்லுநர்) ஆவர்.
#Odisha: Station masters on duty at Singapur Road and Keutguda railway stations have been suspended. https://t.co/uyZihBbgol
— ANI (@ANI) June 25, 2019
ரயில் பயணிகளை ஜகதால்பூருக்கு அழைத்துச் செல்ல இரண்டு பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அவர்களுக்கு உணவு வழங்கப்பட்டுள்ளது என்றார். விபத்துக்கு உள்ளான ரயிலை மீண்டும் ராயகடாவுக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
கடந்த 2017 லில், ஓடிசா மாநிலம் ராஜகாடா அருகே ஜக்தல்பூர்-புவனேஷ்வர் இடையே செல்லும் ஹிராக்கந்த் எக்ஸ்பிரஸ் ரயில் குலேரி ரயில் நிலையத்தில் இருந்து 30 கி.மீ. தொலைவில் தடம் புரண்டு விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் 36 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.