வாட்ஸ் அப்பில் வெளியான வினாத்தாள்... 12ம் வகுப்பு மாணவரிடம் விசாரணை
மும்பை: வாட்ஸ் அப்பில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு கணக்கு பதிவியல் வினாத்தாள் வெளியான விவகாரம் தொடர்பாக மாணவர் ஒருவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மராட்டிய மாநிலத்தில் தற்போது 12 மற்றும் 10-ம் வகுப்பு பொது தேர்வுகள் நடைபெற்று வருகின்றன. நேற்று முன்தினம் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான கணக்கு பதிவியல் (அக்கவுண்டன்சி) தேர்வு நடைபெற்றது.

அப்போது தேர்வு நடைபெறுவதற்கு சில நிமிடங்கள் முன்னதாக வாட்ஸ் அப்பில் வினாத்தாள் பரவியது. இந்த விவகாரம் மும்பை கல்வி மணடலத்திற்கு தெரிய வந்தது.
உடனடியாக தேர்வறையில் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட வினாத்தாளும், வலைதளத்தில் பரவிய வினாத்தாளும் ஒன்றுதானா என்பதை அதிகாரிகள் சரிபார்த்தனர். அவை இரண்டும் ஒரே மாதிரி இருந்ததால் அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து மும்பை கல்வி மண்டல தலைவர் தத்தாரே ஜகதாப் கூறுகையில், ‘தேர்வு தொடங்கிய சில நிமிடங்களுக்கு முன் தான் வினாத்தாள் ‘வாட்ஸ்அப்'பில் பரவி உள்ளது. எனவே இதை பெரியதாக எடுத்து கொள்ளவேண்டாம். எனினும் இந்த விவகாரம் குறித்து சைபர் குற்றப்பிரிவில் புகார் அளிக்க உள்ளோம்' என்றார்.
அதோடு, தேர்வு மையங்களில் வினாத்தாள் கட்டுகள் காலை 10.30 மணிக்குப் பிரிக்கப்படும். அதற்குப் பின்னர் தான் வினாத்தாள் வெளியாகியுள்ளது. எனவே மறுதேர்வு நடத்த வேண்டிய அவசியம் இல்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தநிலையில் ‘வாட்ஸ்அப்'பில் வெளியான வினாத்தாளுடன் மிராரோட்டில் உள்ள தேர்வு மையத்தில் மாணவர் ஒருவர் பிடிபட்டுள்ளார். அந்த மாணவர் குறித்து காசிமீரா போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அந்த மாணவனை எப்படி வினாத்தாள் கிடைத்தது என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோன்று கடந்த ஆண்டும் 12 வகுப்பு பொது தேர்வு கணக்கு பதிவியல் வினாத்தாள் தேர்வு தொடங்கும் சில நிமிடங்களுக்கு முன் ‘வாட்ஸ்அப்'பில் பரவியது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications