ஐஐடி விவகாரம்: ஹுப்ளி-தார்வாட்டில் இன்று பந்த்: 2 பேருந்துகள் சேதம்
பெங்களூர்: ஐஐடி கல்வி நிறுவனத்தை தார்வாடுக்கு பதிலாக ரைச்சூரில் அமைக்கும் கர்நாடக அரசின் முடிவை கண்டித்து அரசியல் தலைவர்கள், கன்னட அமைப்புகள் மற்றும் பிற அமைப்புகள் ஹுப்ளி-தார்வாட் பகுதியில் இன்று முழு அடைப்பு போராட்டத்தை நடத்தி வருகின்றன.
கர்நாடக மாநிலத்தில் உள்ள தார்வாட்டில் ஐஐடி கல்வி நிறுவனம் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் ஐஐடியை தார்வாடுக்கு பதில் ரைச்சூரில் அமைக்க வேண்டும் என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானிக்கு கடிதம் எழுதினார். இதை கண்டித்து ஹுப்ளி-தார்வாட் பகுதியில் அரசியல் தலைவர்கள், கன்னட அமைப்புகள் மற்றும் பிற அமைப்புகள் சார்பில் முழு அடைப்பு போராட்டம் இன்று நடந்து வருகிறது.
முன்னதாக சித்தராமையாவை கண்டித்து திங்கட்கிழமை பேரணி நடைபெற்றது. பேரணியில் அரசியல் தலைவர்கள், தார்வாட் பார் அசோசியேஷன், கன்னட அமைப்புகள் மற்றும் கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர்.
இன்றைய முழு அடைப்பு போராட்டத்தையொட்டி ஹூப்ளி-தார்வாட் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மாநில அரசு பேருந்துகள் இரண்டு தாக்கப்பட்டுள்ளன. மேலும் கலசா-பந்தூரி நீர் திட்டத்தை நிறைவேற்றக் கோரி வரும் 26ம் தேதி வடக்கு கர்நாடகாவில் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படும் என்று கன்னட சலுவளி கட்சித் தலைவர் வாட்டாள் நாகராஜ் அறிவித்துள்ளார்.
கலசா-பந்தூரி திட்டத்தை நிறைவேற்றினால் கோவாவுக்கு நல்லது அல்ல என்று கூறி கோவா அரசு எதிர்ப்பு தெரிவித்ததால் அந்த திட்டம் பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.