நிர்வாண பூஜை நடத்தி சிறுமியை நரபலி தர முயன்ற குடும்பம் - போலீஸ் துப்பாக்கிச்சூட்டில் சிறுவன் மரணம்
அஸ்ஸாம் மாநிலத்தில் சிறுமியை நரபலி கொடுக்க முயன்ற குடும்பத்தினர் மீது கிராம மக்கள் தாக்குதல் நடத்தினர். சண்டையை முடிவுக்கு கொண்டு வர போலீஸ் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த ஆசிரியரின் மகன் இன்று
குவஹாத்தி: பில்லி சூனியத்தில் நம்பிக்கை கொண்டவர்களும் மூட நம்பிக்கையில் ஊறிப்போனவர்களும் இன்னமும் அதிகம் இருக்கிறார்கள். அதன் வெளிப்பாடுதான் நரபலி கொடுக்கும் வரை செல்கிறது. அறிவியல் ஆசிரியராக இருப்பவரே பில்லி சூனியத்திலும் நரபலியிலும் நம்பிக்கை கொண்டு சிறுமியை நரபலி கொடுக்க துணிந்திருக்கிறார். அஸ்ஸாம் மாநிலம் உடல்குரி மாவட்டத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. மூன்று வயது சிறுமியை நரபலி தர முயன்ற போது கிராம மக்கள் தடுத்து நிறுத்தி சிறுமியை காப்பாற்றினர். இந்த சம்பவத்தின் போது போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் காயமடைந்த சிறுவன் உயிரிழந்தான்.
சனிக்கிழமை இரவு கனகபாரா கிராமத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த எட்டு பேரும் மந்திரங்களை உச்சரித்தபடியே நிர்வாணமாக பூஜை செய்தனர். அவர்களின் எதிரே கோரமாக ஒரு பூசாரி அமர்ந்திருக்க, பூசாரியின் அருகே நடுங்கிய நிலையில் 3 வயதான சிறுமி நிர்வாணமாக அமர வைக்கப்பட்டிருந்தார். அந்த சிறுமி வேறு யாருமல்ல அறிவியல் ஆசிரியர் ஜாதவ் சகாரியா என்பரின் மச்சினியின் மகள்தான். தங்களின் சுயநலத்திற்காக ஒரு சிறுமியை நரபலி கொடுக்கத் துணிந்தனர்.
இந்த விசயம் எப்படியே வெளியில் கசிந்து விட சம்பவ இடத்திற்கு வந்த உள்ளூர்வாசிகள், ஊடகத்தினரும் போலீசுக்கு தகவல் கூறிவிட்டு சிறுமியை மீட்க முயன்றனர். இதில் இரு தரப்பினருக்கும் கைகலப்பானது. சிறுமியை மீட்க வந்தவர்கள் மீது கற்களைக்கொண்டும், கோடாரி, கத்தியை கொண்டும் தாக்கியுள்ளனர்.
இதில் கிராம மக்கள் சிலர் காயமடைந்தனர். நிலைமையை கட்டுப்படுத்த சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் நரபலி கொடுக்க முயன்ற குடும்பத்தினர் படுகாயமடைந்தனர். அவர்கள் அனைவரும் குவஹாத்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதில் சிகிச்சை பலனின்றி ஆசிரியரின் மகன் புலகேஷ் சகாரியா உயிரிழந்தார். நரபலி கொடுப்பதற்கு முன் அந்த குடும்பத்தினர் வீட்டில் இருந்த முக்கிய பொருட்களை தீயிட்டு எரித்து விட்டு நிர்வாண நடனம் ஆடிய தகவல் வெளியாகியுள்ளது.
நிர்வாண பூஜை செய்து நரபலி கொடுக்க முயன்ற அனைவரையும் போலீசார் கைது செய்துள்ளனர். கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் இதே வீட்டில் ஒரு சிறுமி தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியானது. அவர் தற்கொலைதான் செய்தாரா அல்லது நரபலி கொடுக்கப்பட்டாரா என்ற கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.