பரபர தேர்தல் முடிவுகள்.. மிசோரத்தில் ஆட்சியை பிடிக்கும் ஜோரம் மக்கள் இயக்கம்? காங்கிரஸ் நிலை மோசம்
ஐஸ்வால்: மிசோரம் மாநிலத்தில் இன்று வாக்கு எண்ணிக்கை நடந்து வரும் நிலையில், அங்கே ஜோரம் மக்கள் இயக்கம் ஆட்சியை பிடிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
தெலுங்கானா, ராஜஸ்தான் உள்ளிட்ட 5 மாநிலங்களில் சமீபத்தில் தான் சட்டசபைத் தேர்தல் நடைபெற்றது. லோக்சபா தேர்தலுக்கு முன்பு கடைசியாக நடக்கும் சட்டசபைத் தேர்தலாக இது இருக்கும் நிலையில், வெற்றியுடன் தேர்தலை எதிர்கொள்ளவே அனைத்து கட்சிகளும் விரும்புகின்றன.

நேற்றைய தினம் மிசோரம் தவிர மற்ற நான்கு தேர்தல் முடிவுகள் வெளியாகின. அதன்படி ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் மாநிலங்களில் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்தது. தெலுங்கானாவில் மட்டும் காங்கிரஸ் ஆறுதல் வெற்றி பெற்றது.
வாக்கு எண்ணிக்கை: மிசோரம் மாநிலத்திலும் நேற்று வாக்கு எண்ணிக்கை நடைபெற இருந்தது இருப்பினும், மிசோரம் மாநிலத்தில் இருக்கும் பல்வேறு அமைப்புகளும் கோரிக்கை விடுத்த நிலையில், அது இன்றைய தினத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது. மிசோரம் மாநிலத்தில் கிறிஸ்துவர்கள் பெரும்பான்மையாக இருக்கும் நிலையில், இந்த கோரிக்கையை எழுப்பி இருந்தனர். அதன்படி இன்று மிசோரம் மாநிலத்தில் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
மற்ற மாநிலங்களில் தேசிய கட்சிகள் ஆதிக்கம் செலுத்தி வந்த நிலையில், மிசோரம் மாநிலத்தில் பிராந்திய கட்சிகள் இடையேதான் கடும் போட்டி இருக்கிறது. இப்போது மிசோரம் மாநிலத்தில் மிசோ தேசிய முன்னணி, ஜோரம் மக்கள் இயக்கம் ஆகியோர் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. அதேபோல காங்கிரஸ் கட்சியும் கூட அங்கே 40 இடங்களிலும் போட்டியிடுகிறது. இந்த மூன்று கட்சிகளுக்கும் தான் பெரும்பாலான இடங்கள் செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது தவிர பாஜக 23 இடங்களிலும் ஆம் ஆத்மி 4 இடங்களிலும் போட்டியிட்டுள்ளன.
மிசோரம்: இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மிசோரம் மாநிலத்தைப் பொறுத்தவரை அங்கே மொத்தம் 40 தொகுதிகள் இருக்கிறது. அதில் எந்தவொரு கட்சியும் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடிக்கக் குறைந்தது 21 இடங்களில் வெல்ல வேண்டும். இப்படியொரு சூழலில் தான் அங்கே வாக்கு எண்ணிக்கை தொடங்கி இப்போது நடந்து வருகிறது.
இப்போது தபால் வாக்குகள் எண்ணும் பணி தொடங்கி வருகிறது. காலை 8.30 மணியளவில் நாம் பார்க்கும் போது ஆளும் மிசோ தேசிய முன்னணி 6 இடங்களிலும் ஜோரம் மக்கள் இயக்கம் 7 இடங்களிலும் முன்னிலையில் இருக்கிறது. அதேபோல காங்கிரஸ் ஒரு இடத்திலும் இதர கட்சிகள் ஒரு இடத்திலும் முன்னிலையில் இருக்கிறது. மிசோ தேசிய முன்னணி மற்றும் ஜோரம் மக்கள் இயக்கம் இடையே கடும் போட்டி நிலவுவதே இது காட்டுகிறது.
பெரும்பான்மைக்கு 21 இடங்கள் தேவை என்ற நிலையில், இப்போது அங்கே ஜோரம் மக்கள் இயக்கம் 27 இடங்களில் முன்னிலையில் உள்ளது. அதேநேரம் ஆளும் மிசோரம் தேசிய முன்னணி 10 இடங்களில் மட்டுமே முன்னிலையில் உள்ளது. இதில் பெரும் அதிர்ச்சி என்றால் காங்கிரஸ் தான். ஏனென்றால் அங்கு வலுவான கட்டமைப்பைக் கொண்டு இருக்காத பாஜக கூட இரண்டு சீட்களில் முன்னிலையில் இருக்கும் நிலையில், காங்கிரஸ் ஒரே ஒரு இடத்தில் மட்டுமே முன்னிலையில் இருக்கிறது.












Click it and Unblock the Notifications