ஐதராபாத்தில் 5 மணி நேரம் வெளுத்துவாங்கிய மழை... வெள்ளத்தில் மூழ்கிய விமான நிலையம்!
ஐதராபாத்தில் 5 மணி நேரமாக வெளுத்து வாங்கிய மழையால் தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது.
ஐதராபாத் : தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் கொட்டிய தொடர் கனமழையால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
ஐதராபாத் நகரில் நேற்று மாலை தொடங்கிய கனமழை, தொடர்ந்து 5 மணி நேரமாக விடாமல் வெளுத்து வாங்கியது. வெளுத்து வாங்கிய மழையால் அனைத்து சாலைகளிலும் தண்ணீர் தேங்கியது. மழை நீர் ஆர்ப்பறித்து ஓடும் ஆற்று நீர் போல ஓடி தாழ்வான பகுதிகளில் நிரப்பியது.
வாகனங்கள் மழை நீரில் செல்ல முடியாமல் திணறிப் போயின. தாழ்வான பகுதிகளில் இருந்த குடியிருப்புகள், அலுவலங்கள் அனைத்திலும் மீழைநீர் புகுந்ததால் மக்கள் செய்வதறியாது திகைத்துப் போயினர்.
|
மீட்புப் பணிக்கு முதல்வர் உத்தரவு
நிலைமையை எதிர்கொண்டு இயல்புநிலைக்கு திரும்ப உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஐதராபாத் முனிசிபல் கார்பரேஷன் நிர்வாகத்துக்கு முதலமைச்சர் சந்திரசேகர்ராவ் உத்தரவிட்டுள்ளார். வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
|
குளம் போலான விமானநிலையம்
இரவு முழுவதும் கொட்டித் தீர்த்த மழையால் இன்று ஐதராபாத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மழை நீர் குளம் போலத் தேங்கியதால் விமான நிலையமும் நீர் நிரம்பி காட்சியளித்தது. விமானங்கள் நிற்குமிடத்தில் குளம் போல மழைநீர் தேங்கியதால் விமான சேவையில் பாதிப்பு ஏற்பட்டது.
|
அலுவலகத்திலேயே தங்கிய ஊழியர்கள்
ரயில் தண்டவாளங்கள் மழைநீரில் மூழ்கியதால் சுமார் 12 மணி நேரமாக புறநகர் ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. கனமழையால் அலுவலகம் சென்றோர் அலுவலகத்திலேயே தங்கவும் நேரிட்டது.
|
இன்று கனமழைக்கு வாய்ப்பு
கடந்த மாதம் மும்பையில் கொட்டித் தீர்த்த மழையின் அளவை விட ஐதராபாத்தில் நேற்று ஒரே நாளில் மழை பெய்துள்ளது. இந்நிலையில் இன்றும் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் எச்சரித்துள்ளது.