‘என் மூளையே என் எதிரி’... 5வது மாடியில் இருந்து குதித்து பெண் செய்தி வாசிப்பாளர் தற்கொலை
ஹைதராபாத் பெண் செய்தி வாசிப்பாளர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
Recommended Video
ஹைதராபாத்: தெலுங்குத் தொலைக்காட்சி பெண் செய்தி வாசிப்பாளர், ஐந்தாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டது ஹைதராபாத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஹைதராபாத்தில் உள்ள தெலுங்கு தொலைக்காட்சி ஒன்றில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி வந்தவர் ராதிகா ரெட்டி (36). கடந்த ஆறு மாதங்களுக்கு முன் விவாகரத்து மூலம் கணவரைப் பிரிந்த இவருக்கு, 14 வயதில் மூளை வளர்ச்சி பாதிக்கப்பட்ட மகன் உள்ளான்.
பெற்றோர் மற்றும் மகனுடன் மூசாப்பேட்டையில் ஐந்து தளங்கள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பில் ராதிகா வசித்து வந்தார்.
இந்நிலையில் நேற்றிரவு 10.45 மணியளவில் வழக்கம்போல், பணி முடிந்து வீடு திரும்பியுள்ளார் ராதிகா. கையில் வைத்திருந்த ஹேண்ட்பேக்கை வீட்டினுள் வைத்தவர் நேராக மொட்டை மாடிக்குச் சென்றுள்ளார்.
பின்னர் யாரும் எதிர்பார்க்காத வேளையில் மொட்டை மாடியில் இருந்து அவர் கீழே குதித்தார். இதில் பலத்த காயமடைந்த அவர், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம்பக்கத்தார் ராதிகாவின் மரணத்தால் அதிர்ச்சி அடைந்தனர்.
தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், ராதிகாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். போலீசாரின் ஆய்வில், ராதிகாவின் ஹேண்ட்பேக்கில் இருந்து அவரது கடைசிக் கடிதம் கைப்பற்றப்பட்டது.
அதில் அவர், 'மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்கிறேன். என் சாவுக்கு யாரும் காரணமல்ல. எனது மூளையே எனக்கு எதிரி’ எனக் குறிப்பிட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
நேற்றைய பணியின் போது எப்போதும்போல் சிரித்த முகத்துடனேயே ராதிகா இருந்ததாகவும், மன அழுத்தம் அல்லது சோகம் என எதுவும் அவரது நடவடிக்கையில் தெரியவில்லை என்றும் அவரது சக ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
ராதிகாவின் தற்கொலை தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.