ஹைட்ரோகார்பன் திட்டத்தை தடுக்க தமிழக அரசு தயாரில்லை? அமைச்சர் ஜெயக்குமார் கூறுவதை பாருங்கள்
விவசாயத்துக்கு பாதிப்பு ஏற்படாத வண்ணம் ஹைட்ரோ கார்பன் திட்டம் செயல்படுத்தப்படும் என்று தமிழக நிதி அமைச்சர் ஜெயக்குமார் உறுதி அளித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி: புதுக்கோட்டை மாவட்டம், நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்துவதாக அறிவித்தது. இதனால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்றும் விவசாயம் கேள்விக்குறியாகிவிடும் என்றும் அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், தமிழகத்துக்கு வறட்சி நிவாரணம், நீட் தேர்வில் இருந்து விலக்கு உள்ளிட்ட கோரிக்கைகளை பிரதமர் நரேந்திர மோடியிடம் வலியுறுத்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, நிதி அமைச்சர் டி. ஜெயக்குமார் உள்ளிட்டோர் டெல்லி சென்றனர்.
அங்கு செய்தியாளர்களை அமைச்சர் ஜெயக்குமார் சந்தித்தார். அப்போது ஹைட்ரோ கார்பன் திட்டமானது விவசாயத்தை பாதிக்காத வண்ணம் செயல்படுத்துவதற்கான சாத்தியக் கூறுகள் ஆராயப்பட்டு பின்னர் செயல்படுத்தப்படும்.
தமிழக வளர்ச்சி திட்டங்களுக்கு கூடுதலாக நிதி ஒதுக்கக் கோரி மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லியை சந்திக்கவுள்ளதாக தெரிவித்தார். போராட்டத்திற்கு பபணிந்து, ஹைட்ரோகார்பன் திட்டத்தை அரசு கைவிடும் என்று எதிர்பார்த்த நிலையில், பாதிப்பு இல்லாமல் செயல்படுத்தப்படும் என்று அமைச்சர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.