ரகுராம் ராஜனின் முடிவு மிகுந்த வருத்தம் அளிக்கிறது - ப.சிதம்பரம்
டெல்லி: ரிசர்வ் வங்கியின் ஆளுநராக 2வது முறையாக பதவி வகிக்க விருப்பமில்லை என்று ரகுராம் ராஜன் கூறியதற்கு ப.சிதம்பரம் வருத்தம் தெரிவித்துள்ளார், மேலும் அவரது முடிவால் கடும் ஏமாற்றமடைந்துள்ளதாகவும் கூறியுள்ளார்.
ரிசர்வ் வங்கியின் ஆளுநராக கடந்த 2013 ஆம் ஆண்டு அப்போதைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசால் நியமிக்கப்பட்டவர் ரகுராம் ராஜன். மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட போது பல்வேறு செயலாளர்கள் மாற்றப்பட்டனர். ஆனால் ரகுராம் ராஜன் ஆளுநராகவே தொடர்ந்து பதவி வகித்து வந்தார்.

இந்நிலையில், மும்பையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய ரகுராம் ராஜன், தாம் ரிசர்வ் வங்கி ஆளுநர் பதவியில் 2-வது முறையாக நீடிக்க விரும்பவில்லை எனக் கூறினார். இதுகுறித்து முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கூறுகையில்,
பதவிக்காலம் நிறைவடைவதையொட்டி ரிசர்வ் வங்கி ஆளுநர் பதவியில் இருந்து ரகுராம் ராஜன் விலக இருப்பது வருத்தம் அளிப்பதாக உள்ளது. 2-வது முறையாக ஆளுநர் பதவியில் நீடிக்க விருப்பமில்லை என்ற அவரது இந்த முடிவு ஆழ்ந்த வருத்தத்தை எனக்கு ஏற்படுத்துகிறது. ஆனால் நான் ஆச்சரியமடையவில்லை
எனினும், இது எதிர்பார்க்காத ஒரு நிகழ்வு அல்ல. ஒரு மிகச்சிறந்த பொருளாதார வல்லுனரை அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளின் பேரில் அரசு விமர்சனம் செய்திருக்கிறது. நான் ஏற்கெனவே முன்பு தெரிவித்தது போல் இந்த அரசு ரகுராம் ராஜன் போன்ற ஒருவருக்குத் தகுதியுடையதல்ல. எது எப்படியிருந்தாலும் இந்தியாவுக்குத்தான் இழப்பு என்றார். இவ்வாறு ப.சிதம்பரம் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications