நான் ஒன்றும் உதவியற்றவள் இல்லை, செல்வாக்கு மிக்கவள்: அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ்
டெல்லி: நான் ஒன்றும் எதையும் செய்ய முடியாதவள் இல்லை. மாறாக மிகவும் செல்வாக்கு வாய்ந்த வெளியுறவுத் துறை அமைச்சர் என்று மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் ராஜ்யசபாவில் தெரிவித்துள்ளார்.
எல்லை தாண்டும் தமிழக மீனவர்களை சுட்டுக் கொல்வோம் என்று இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே தெரிவித்துள்ளது வெளியுறவுத் துறை அமைச்சரின் எதையும் செய்ய முடியாத நிலையை காண்பிக்கிறது. ஒபாமா இந்தியா வந்தபோது வெளியுறவுத் துறை அமைச்சரை மேடையில் கூட அமரவிடவில்லை என ராஜ்யசபாவில் காங்கிரஸ் எம்.பி. ராஜீவ் சுக்லா தெரிவித்தார்.

சுக்லாவின் பேச்சுக்கு பதில் அளித்து பேசிய மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் கூறுகையில்,
நான் ஒன்றும் எதையும் செய்ய முடியாதவள் இல்லை. நான் செல்வாக்குமிக்க வெளியுறவுத் துறை அமைச்சர். அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா இந்தியா வந்தபோது நான் பிரதமர் அருகே அமர்திருந்தேன். நீங்கள் அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை பார்க்கலாம்.
நான் இலங்கை சென்றபோது தமிழக மீனவர்கள் பிரச்சனை பற்றி பேசினேன். இவ்வாறு கூறுவது சரியில்லை என்று இலங்கை பிரதமர் விக்ரமசிங்கேவிடம் தெரிவித்தேன். மீனவர் பிரச்சனை பற்றி தீவிரமாக கண்காணித்து வருகிறோம். நான் இலங்கை பிரதமருடன் பேசியது கேமராவில் பதிவாகியுள்ளது. அவரின் பேச்சுக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
எங்களின் கண்டனத்திற்கு அவர்கள் பதில் அளிக்கவில்லை. நாம் கூறியதை அவர்கள் புரிந்து கொண்டார்கள் என்பதையே அவர்களின் மௌனம் தெரிவிக்கிறது.
பாஜக அரசு மத்தியில் ஆட்சிக்கு வந்ததில் இருந்து ஒரு இந்திய மீனவர் கூட இலங்கை கடற்படையினரால் கொல்லப்படவில்லை என்பதை பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தியா அல்லது இலங்கையில் எந்த மீனவரும் கைதாவதோ, சிறை பிடிக்கப்படுவதோ இல்லாத நிலை ஏற்படும் என்றார்.












Click it and Unblock the Notifications