நான் ரொம்ப பிஸி.. விசாரணைக்கு நேரம் இல்லை.. சிபிஐக்கு மெயில் அனுப்பிய நீரவ் மோடி!
நீரவ் மோடி சிபிஐ விசாரணையில் கலந்து கொள்ள முடியாது என்று குறிப்பிட்டு இருக்கிறார்.
டெல்லி: நீரவ் மோடி சிபிஐ விசாரணையில் கலந்து கொள்ள முடியாது என்று குறிப்பிட்டு இருக்கிறார். மேலும் மிகவும் திமிராக மெயில் அனுப்பி இருக்கிறார்.
பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ11,360 கோடி சட்ட விரோதப் பணப் பரிமாற்றம் செய்ததாக குஜராத் வைர வியாபாரி நீரவ் மோடியின் மீது குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது. இதனால் அவரது வீட்டில் அமலாக்கப் பிரிவு சோதனை நடத்தியது.
இதில் பல்வேறு இடங்களில் பல்வேறு சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டு இருக்கிறது. நீரவ் மோடியை மத்திய அரசு தீவிரமாக தேடி வருகிறது.
விசாரணை நடக்கிறது
தற்போது இவரின் நெருங்கிய உறவினர்கள் வீட்டில் சோதனையும், விசாரணையும் நடக்கிறது. முக்கிய பணியாளர்கள் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். அதேபோல வங்கி ஊழியர்களும் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறார்கள்.
மெயில்
அவர் எங்கே இருக்கிறார் என்று சரியாக தெரியாத காரணத்தால் சிபிஐ தரப்பு அவருக்கு மெயில் அனுப்பி இருக்கிறது. விசாரணை நடக்க இருக்கிறது நீங்கள் கலந்து கொள்ள வேண்டும் என்று கோரிக்கை வைத்து இருக்கிறது. இரண்டு நாட்களுக்கு முன் இந்த இமெயில் அனுப்பப்பட்டு இருக்கிறது.
வேலை இருக்கு
தற்போது இதற்கு நீரவ் மோடி பதில் அளித்துள்ளார். அதில் ''எனக்கு இங்கு நிறைய வேலை இருக்கிறது. என்னால் விசாரணையில் கலந்து கொள்ள முடியாது. வெளிநாட்டில் நிறைய வியாபாரம் செய்ய இருக்கிறது'' என்றுள்ளார்.
மீண்டும் மெயில்
இதையடுத்து சிபிஐ அவருக்கு மீண்டும் மெயில் அனுப்பி இருக்கிறார்கள். அதில் ''சிபிஐ விசாரணையில் நீங்கள் கண்டிப்பாக கலந்து கொள்ள வேண்டும். உங்கள் மீது நிறைய குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டு இருக்கிறது. நீங்கள் நாடு திரும்ப வேண்டும்'' என்றுள்ளார்கள். ஆனால் இதற்கு நீரவ் மோடி பதில் அளிக்கவில்லை.