ஆரியன் என்றால் என்ன என்று தெரியாது.. 'நான் இந்தியன்': கார்கேவுக்கு வெங்கய்யா நாயுடு பதிலடி
டெல்லி: ஆரியன் என்றால் என்னவென்று எனக்கு தெரியாது, இந்தியன் என்று நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சர் வெங்கய்ய நாயுடு லோக்சபாவில் தெரிவித்தார். எதிர்க்கட்சி குழு தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின், ஆரிய-திராவிட பேச்சுக்கு பதிலடியாக வெங்கய்யா இவ்வாறு கூறியனார்.
லோக்சபாவில் இன்றைய விவாதத்தின்போது பேசிய வெங்கய்ய நாயுடு "எனக்கு ஆரியன் என்றால் என்ன அர்த்தம் என்று தெரியாது. ஆனால் நான் இந்தியன். சகிப்புத்தன்மை பற்றி எதிர்க்கட்சிகள் பேசுகின்றன. மக்கள் வாக்களித்து பாஜக ஆட்சிக்கு வந்துள்ளது. ஆனால் அதை எதிர்க்கட்சிகளால் சகிக்க முடியவில்லை. மக்களின் தீர்ப்புக்கு மதிப்பு கொடுத்து எதிர்க்கட்சிகள் இதை சகித்துக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சரும், மற்றொரு முன்னாள் மத்திய அமைச்சரும், வெளிநாட்டுக்கு சென்று, இந்திய பிரதமரை தூக்கி வீசுங்கள் என்று கூறியுள்ளனர்.
இந்த பேச்சுக்காக, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அந்த மாஜி அமைச்சர்களை கண்டிப்பார் என்று எதிர்பார்த்தேன். ஆனால் கண்டிக்கவில்லை. 'மேற்படி' சகிப்புத்தன்மை சர்ச்சைகள் அனைத்து குறித்தும் விவாதிக்க அரசு தயாராக உள்ளது. ஒளிவு மறைவு இல்லாமல் மக்கள் முன்பு அனைத்தையும் முன்வைக்க தயாராக உள்ளோம்.
இந்த நாட்டில் எல்லாம் வெளிப்படையாகத்தான் நடக்கிறது. இட ஒதுக்கீட்டை திரும்ப பெறும் எண்ணம் அரசிடம் இல்லை. இவ்வாறு வெங்கய்ய நாயுடு தெரிவித்தார்.