பிரதமராக எனக்கு விருப்பமில்லை... எம்.பியாக மட்டுமே ஆசை - நிதிஷ்குமார்
பாட்னா: தனக்கு எம்.பியாகும் ஆசை மட்டுமே இருப்பதாகவும் பிரதமராக விரும்பவில்லை என்று பீகார் முதல்வர் நிதிஷ் குமார் தெரிவித்துள்ளார்.
பீகார் மாநிலத்தில் ஐக்கிய ஜனதா தளம், லாலு பிரசாத்தின் ராஷ்டிரிய ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் கட்சிகள் இணைந்து மெகா கூட்டணி அமைத்து கடந்த சட்டசபை தேர்தலை சந்தித்தன. இந்த கூட்டணி மாபெரும் வெற்றி பெற்ற ஆட்சியை கைப்பற்றியது. இதையடுத்து பீகார் முதல்வராக நிதிஷ்குமார் தற்போது செயல்பட்டு வருகிறார்.
இந்நிலையில் பாரதீய ஜனதா இல்லாத கூட்டணிக்கு பிரதமர் வேட்பாளராக அடுத்த பாராளுமன்ற தேர்தலில் நிதிஷ் குமார் நிறுத்தப்படுவார் என்று ஊகங்கள் வெளியாகி உள்ளன. ஆனால் தனக்கு எம்.பியாகும் ஆசை மட்டுமே இருப்பதாகவும் பிரதமராக விரும்பவில்லை என்று நிதிஷ் குமார் கூறியுள்ளார்.
பாட்னாவில் நடந்த நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட நிதிஷ்குமார் கூறுகையில், அமைச்சர், முதலமைச்சர், பிரதமர் ஆக வேண்டும் என்று நான் ஒரு போதும் கனவு கண்டதில்லை. வாழ்க்கையில் ஒரே ஒரு முறையாவது எம்.பியாக வேண்டும் என்றுதான் எனக்கு ஆசை உள்ளது. சிலர் தேவையில்லாமல் இதுபோல் (பிரதமராக விரும்புவதாக) பரப்பி வருகிறார்கள் என்று தெரிவித்தார்.