என் சுட்டிப்பெண் பேச்சை கேட்டு 20 நாளாச்சு: கண்ணீர் சிந்தும் ஏழைத்தாய்
மும்பை: மும்பை மருத்துவமனையில் வலியால் துடித்து அழும் 9 வயது சிறுமியின் சிகிச்சைக்கு நல்லுள்ளங்களிடம் நிதியுதவி கேட்கிறார் அவரின் தாய்.
மும்பையில் குப்பை பொறுக்கும் தொழில் செய்பவரின் மனைவி லட்சுமி. அவர்களுக்கு 3 மகள்கள், 1 மகன் உள்ளார். அவர்களின் கடைசி குழந்தையான 9 வயது சசிகலா சுட்டிப்பெண். லட்சுமியின் கணவர் மாதம் ரூ. 5 ஆயிரம் சம்பாதித்து குடும்பத்தை காப்பாற்றுகிறார்.
விடாமல் பேசி விளையாடி துருதுருவென்று இருக்கும் சசிகலா வரலாற்று பரீட்சைக்கு படித்துக் கொண்டிருந்தபோது கால் வலிக்கிறது என்று கூறியுள்ளார். காய்ச்சலும் அடித்துள்ளது.
உடனே அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றால் அவரை மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டும் என்று டாக்டர் கூறியுள்ளார். சசிகலாவை பாபா மருத்துவமனையில் அனுமதித்தனர்.
சசிக்கு காய்ச்சல் அதிகமானதுடன் மூச்சுவிட முடியாமல் கஷ்டப்பட்டுள்ளார். அதன் பிறகு நானாவதி மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு அவருக்கு செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டது.
சசியை பரிசோதனை செய்த டாக்டர் அவருக்கு ஜிபிஎஸ்(Guillain-Barré syndrom) பிரச்சனை உள்ளது என்றார். உடலின் நோய் எதிர்ப்பு சக்தி முக்கிய நரம்பு மண்டலத்தின் ஒரு பகுதியை தாக்கி சோர்வு, மூச்சுத்திணறல் மற்றும் சில நேரங்களில் உடலை செயல் இழக்கச் செய்வது தான் ஜிபிஎஸ்.
இதை சரி செய்ய சசிக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும். அதற்கு ரூ. 9 லட்சத்து 65 ஆயிரம் தேவைப்படுகிறது. ஏற்கனவே ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் செலவு செய்துள்ளார் லட்சுமி.
ரூ. 9 லட்சத்து 65 ஆயிரத்திற்கு நான் எங்கு போவேன். தயாள குணமுள்ளவர்கள் உதவ வேண்டும் என்று மன்றாடுகிறார் லட்சுமி. சசிக்கு உதவ விரும்புபவர்கள் கெட்டோ(Ketto) மூலம் உதவலாம்.
விடாமல் பேசும் சசிகலாவால் தற்போது பேச முடியாமல் செய்கை செய்கிறார். இதை பார்த்து அவரது தாய், தந்தை தினம் தினம் கண்ணீர் வடிக்கிறார்கள். கடந்த 20 நாட்களாக சசி பேசவே இல்லை. அவரின் குரலை கேட்க ஆவலாக உள்ளனர் பெற்றோர்.
RECOMMENDED STORIES