அறிவியலை, நட்சத்திரங்களை, இயற்கையை நேசித்த ரோகித் வெமுலா... தூக்குக்கயிறை முத்தமிட்டது ஏன்?

Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: நான் அறிவியலை, நட்சத்திரங்களை, இயற்கையை நேசித்திருந்தேன். ஆனால் பின்னாளில் மனிதர்கள் மீது நேசம் கொண்டேன். எழுத்தாளராக வேண்டும் என்றே எப்பொழுதும் விரும்பியிருக்கிறேன். கார்ல் ஸேகன் போல அறிவியலை எழுதவேண்டுமென்பதே என் விழைவு. ஆனால் இறுதியில் இக்கடிதம் மட்டுமே எனக்கு எழுதக் கிடைத்திருக்கிறது என்று தனது தற்கொலை கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார் தலித் மாணவர் ரோகித் வெமுலா.

தற்கொலை என்பது கோழைகளின் செயல் என்பது என் எண்ணம். ஆனால் அநீதிக்கு எதிராக முழக்கமிட்ட மாணவன் ரோகித் ஏன் தற்கொலை செய்து கொண்டார் என்பதுதான் என் கேள்வியாக உள்ளது.

'I loved Science, Stars, Nature': Suicide by suspended Dalit student

ஹைதராபாத் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சிப் படிப்பு மேற்கொண்டிருந்த ரோகித் வெமுலா உள்ளிட்ட 5 மாணவர்கள் கடந்த ஆகஸ்ட் மாதம் பல்கலைக்கழகத்திலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டனர். இதன் தொடர்ச்சியாக கடந்த 2ம் தேதியன்று ரோஹித் உள்ளிட்ட 5 பேரும் பல்கலைக்கழகத்தின் தங்கும் விடுதியில் இருந்தும் நீக்கப்பட்டனர். இந்த மாணவர்கள் அனைவரும் அம்பேத்கர் மாணவர்கள் கூட்டமைப்பைச் சேர்ந்தவர்களாவர்.

இந்நிலையில், ரோகித் வெமுலா விடுதி அறையில் ஞாயிற்றுக்கிழமை மாலை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது மரணத்துக்கு பல்கலைக்கழக நிர்வாகமே பொறுப்பு எனக் கூறிய அம்பேத்கர் மாணவர்கள் கூட்டமைப்பைச் சேர்ந்த மாணவர்கள், அறையில் இருந்து ரோஹித் உடலை அப்புறப்படுத்தவிடாமல் போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஒரு கட்டத்தில் போலீஸார், மாணவர்கள் எதிர்ப்பையும் மீறி வலுக்கட்டாயமாக உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து பதற்றத்தை தணிக்கை போலீஸார் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.

ரோகித் வெமுலாவின் சொந்த ஊர் ஆந்திர மாநிலம் குண்டூர். மிகவும் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்த ரோகித், பல்கலைக்கழக மானியக் குழுவின் இளநிலை ஆய்வு அறிஞர்களுக்கான உதவித்தொகையை பெற்றுவந்தார். தற்கொலைக்கு முன்னதாக ரோகித் எழுதிய கடிதத்தைப் படிப்பவர்களின் கண்களில் கண்ணீரை வரவழைக்கிறது.

தற்கொலை கடிதம்

"இக்கடிதத்தை நீங்கள் வாசிக்கையில் நானிருக்க மாட்டேன். என்மீது கோபம் கொள்ளவேண்டாம். நானறிவேன், உங்களில் சிலர் என்மீது உண்மையான அக்கறை கொண்டிருந்தீர்கள், நேசித்தீர்கள், என்னை நன்றாக நடத்தினீர்கள். எனக்கு எவர் மீதும் புகார் இல்லை. மாறாக அது எப்பொழுதும் என்மீதுதான் எனக்குண்டு.

எனக்குப் பிரச்சனைகள் இருந்தன. என் ஆன்மாவுக்கும் உடலுக்குமிடையே பெருகிவரும் இடைவெளியை நான் உணர்கிறேன். அதனால் உருக்குலைந்தவனாய் மாறிவிட்டேன். எழுத்தாளராக வேண்டும் என்றே எப்பொழுதும் விரும்பியிருக்கிறேன். கார்ல் ஸேகன் போல அறிவியலை எழுதவேண்டுமென்பதே என் விழைவு. ஆனால் இறுதியில் இக்கடிதம் மட்டுமே எனக்கு எழுதக் கிடைத்திருக்கிறது.

நான் அறிவியலை, நட்சத்திரங்களை, இயற்கையை நேசித்திருந்தேன். ஆனால் பின்னாளில் மனிதர்கள் மீது நேசம் கொண்டேன். இயற்கையிடமிருந்து வெகுகாலத்திற்கு முன்பே விலகிவிட்டவர்கள் அவர்கள் என்பதையறியாமல் நான் மனிதர்களை நேசித்தேன். எம் உணர்வுகள் இரண்டாந்தரமாக்கப்பட்டன. எம் அன்பு போலியாக்கப்பட்டது. எம் நம்பிக்கைகள் சாயம்பூசப்பட்டன. எம் சுயம், செயற்கையான கலை மூலமாகவே செல்லத்தக்கதாயிற்று. காயப்படாமல் நேசங்கொள்வது மிகவும் கடினமானதாக மாறி இருக்கிறது.

மனிதனின் மதிப்பு அவனுடைய உடனடி அடையாளமாக மட்டும் சுருக்கப்பட்டது. அண்மைய சாத்தியங்களாகிவிட்ட தேர்தல் வாக்காகவும் எண்ணாகவும் பண்டமாகவும் குறைக்கப்பட்டுவிட்டது. இங்கு மனிதன் ஒருபோதும் அவனுடைய மனமாகப் பார்க்கப்பட்டதில்லை. கனவுகளால் உருவான அற்புதமாகவும் கருதப்பட்டதில்லை. ஒவ்வொரு துறையிலும், கல்வியிலும், தெருக்களிலும், அரசியலிலும் அப்படியே. மரணிப்பதிலும் வாழ்தலிலும்கூட.

இதுபோன்றதொரு கடிதத்தை முதன்முறையாக எழுதுகிறேன். ஓர் இறுதிக் கடிதத்தை எழுதுவது இதுவே முதன்முறை. ஒருவேளை இக்கடிதத்தை நான் சரியான முறையில் எழுதவில்லையெனில் என்னை மன்னியுங்கள். தவறு என்மீதும் இருக்கலாம்; உலகைப் புரிந்துகொள்வதில், அன்பை, வலியை, வாழ்க்கையை, மரணத்தைப் புரிந்துகொள்வதில் நான் தவறிழைத்திருக்கக்கூடும். ஒருபோதும் அவசரப்பட்டதில்லை. ஆனால் எப்போதும் ஒரு வாழ்க்கையைத் தொடங்க பெரும் ஆவல் கொண்டு விரைந்திருக்கிறேன்.

ஒரு சிலருக்கு வாழ்வே சாபம்தான். என் பிறப்பே மரணத்தையொத்ததொரு விபத்துதான். என் பால்யகால தனிமையிலிருந்து ஒருபோதும் என்னால் மீள இயலவில்லை. கடந்தகாலத்தில் எவராலும் பாராட்டப்படாத குழந்தை நான். இக்கணத்தில் நான் காயப்பட்டிருக்கவில்லை. வருத்தங்கொள்ளவும் இல்லை. வெறுமையாய் இருக்கிறேன். அவ்வளவே. என்குறித்த கவலையற்று உள்ளேன். இந்நிலை மிகவும் பரிதாபமானது. ஆகவே நான் இதைச் செய்கிறேன்.

பிறர் என்னை கோழை என்றழைக்கலாம்; சுயநலமானவன் அல்லது முட்டாள் என்றும் கூறலாம். நானே போய்விட்டபின், என்னை பிறர் என்னவென்று அழைத்தாலும் நான் கவலைப்படத் தேவையில்லை. இறப்பிற்குப் பின்னான கதைகளில், பேய்கள் அல்லது ஆவிகளில் எனக்கு நம்பிக்கையில்லை. ஒரே ஒரு விடயத்தில் எனக்கு நம்பிக்கை உள்ளதென்று கொண்டால், நட்சத்திரங்களிடையே பயணித்து பிற உலகங்களை அறிந்துகொள்ளும் நம்பிக்கை உண்டு.

இந்த மடலை வாசிக்கும் எவரேனும் எனக்கு செய்வதற்கு ஒன்று உண்டெனில், இதை மட்டும் செய்யுங்கள். எனக்கு 7 மாத உதவித்தொகை வரவேண்டியிருக்கிறது. ஒரு லட்சத்து எழுபத்தி ஐந்தாயிரம் ரூபாய். என் குடும்பத்திற்கு அத்தொகை போய்ச் சேர்வதை உறுதி செய்யுங்கள். ராம்ஜிக்கு 40 ஆயிரம் வரை நான் தரவேண்டியுள்ளது.. அவர் என்னிடம் ஒருபோதும் திருப்பிக் கேட்கவில்லை. ஆனால் அதிலிருந்து இத்தொகையையும் செலுத்திவிடுங்கள்.

என் இறுதிச் சடங்கு மௌனமாகவும் அமைதியாகவும் நடக்கட்டும். நான் வெறுமனே தோன்றி மறைந்ததுபோல் இருங்கள். போதும். எனக்காக கண்ணீர் சிந்தவேண்டாம். உயிருடனிருப்பதைவிட இறப்பில் நான் மகிழ்கிறேன் என்றறியுங்கள்.

"நிழல்களிலிருந்து நட்சத்திரங்களுக்குச்" செல்கிறேன்.

வி.ஆர்
17/01/2016

சில முறைமைகளை எழுத மறந்துபோனேன்.

என்னைக் கொல்லும் என் செய்கைக்கு எவரும் பொறுப்பல்ல. தங்கள் செய்கைகளாலோ அல்லது சொற்களாலோ எவரும் இதைச் செய்யும்படி என்னைத் தூண்டவில்லை. இது என் முடிவு. நான், நான் மட்டுமே இதற்குக் காரணம். என் நண்பர்களையோ எதிரிகளையோ நான் சென்றபின் சிக்கலில் ஆழ்த்தவேண்டாம்.

உமா அண்ணா, உங்கள் அறையை இதற்குப் பயன்படுத்துவதற்கு மன்னியுங்கள். ASA குடும்பத்திற்கு, உங்கள் அனைவரையும் ஏமாற்றத்துக்குள்ளாக்குவதற்காக மன்னியுங்கள். நீங்கள் என்னை மிகவும் நேசித்தீர்கள். வருங்காலம் சிறப்பாக அமைய வாழ்த்துகள்.

இறுதியாக ஒரு முறை,

ஜெய் பீம்,

விடைபெறுகிறேன் என்று தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார் ரோகித் வெமுலா.

மாணவர்கள் போராட்டம்

பல்கலைக்கழகத்தில் இருந்தும், தங்கும் விடுதியில் இருந்தும் நீக்கப்பட்டதாலேயே ரோகித் மனமுடைந்து தற்கொலை செய்துகொண்டதாகக் கூறும் பல்வேறு மாணவ கூட்டமைப்பினர், இதற்கு பொறுப்பேற்று பல்கலைக்கழக துணைவேந்தர் பி.அப்பா ராவ், தொழிலாளர் நலத்துறை இணை அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயாவும் தங்கள் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.

மத்திய அமைச்சர் காரணமா?

தலித் மாணவர்கள் 5 பேரும் பல்கலைக்கழகத்தில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டதன் பின்னணியில் பாஜகவின் அழுத்தம் இருப்பதாக மாணவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். செகந்தராபாத் தொகுதியில் மக்களவை எம்.பி.யும், மத்திய இணை அமைச்சருமான பண்டாரு தத்தாத்ரேயா மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இராணிக்கு எழுதிய கடிதத்தில், "ஹைதராபாத் பல்கலைக்கழக வளாக தரத்தை மேம்படுத்த வேண்டுமானால் 5 மாணவர்களும் இடைநீக்கம் செய்யப்பட வேண்டும்" என வலியுறுத்தியதாகவும் அதன் அடிப்படையிலேயே தலித் மாணவர்கள் ஐவரும் நீக்கப்பட்டனர் என மாணவ தரப்பு குற்றஞ்சாட்டுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+